பதிவு செய்த நாள்
29
ஜன
2013
10:01
தாடிக்கொம்பு: திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே தேவிநாயக்கன் பட்டியில் சிறுமி மூலம் "நிலாப்பெண் வழிபாடு நடந்தது. தேவிநாயக்கன்பட்டியில், ஆண்டுதோறும் தை பவுர்ணமி அன்று, இவ்வழிபாடு நடக்கிறது. இவ்வழிபாட்டில் அந்த கிராமத்தை சேர்ந்த பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளில் (பருமடையாதவர்) ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர். அச்சிறுமியை நிலாவின் தேவதை எனக்கருதி ""நிலாப்பெண் என பெயரிடுகின்றனர். ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் சிறுமி, தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு நிலாப் பெண்ணாக கருதப்படுகிறார்.தை பவுர்ணமியான நேற்று முன்தினம், இக்கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகள் பிரியதர்ஷினி,11,என்ற 6ம் வகுப்பு மாணவிக்கு (மூன்றாவது ஆண்டாக) நிலாப்பெண் வழிபாடு நடத்தினார்.
பால் சாதம்: வழிபாட்டிற்கு முதல் ஐந்து நாட்கள், சிறுமி இங்குள்ள மாசடச்சி அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். அவருக்கு கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து பால் மற்றும் சாப்பாடு தரப்பட்டது. இவற்றை சேகரித்த சிறுமி, அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் பால் சாதம் வழங்கினார். பவுர்ணமி அன்று இரவு, ஊருக்கு அருகிலிருக்கும் சரளி மலை அருகே, "நிலாப்பெண் அழைத்து வரப்பட்டார். ஆவாரம் பூக்களால் அலங்கரித்து, கையில் பூக்கூடையும் தரப்பட்டது. இங்குள்ள மாரியம்மன், விநாயகர் கோயில் முன், "நிலா பெண் மற்றும் அவரது வயதுடைய சிறுமிகள் அமர வைக்கப்பட்டனர். அங்கு கும்மியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.விளக்கு: பின்னர், மாசடச்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிறுமியின் முறை மாமன்களால், தென்னை மட்டையில் குடிசை கட்டும் நிகழ்ச்சியும், மாவிளக்கு அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதன்பின், கிராம கிணற்றுக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி கையில், பூக்களுடன், மண் விளக்கு ஒன்றை கொடுத்து, கிணற்றில் நீரில் விட வைத்தனர்.
ஊர் செழிக்கும்: நிலாப்பெண் கிணற்றில் விடும் விளக்கு அணையாமல், நீரில் சில நாட்கள் மிதக்கும். இதனால் கிராமம் செழிப்பாகவும், நோய் இன்றியும் இருக்கும் என, இக்கிராம மக்கள் நம்புகின்றனர்.