பதிவு செய்த நாள்
29
ஜன
2013
10:01
தஞ்சாவூர்: தியாகராஜர் கீர்த்தனைகள், மனிதநேயத்தை வளர்க்கக்கூடியது, என, தமிழக கவர்னர் ரோசையா பேசினார். தஞ்சை அடுத்த திருவையாறில், தியாகராஜரின், 166வது ஆராதனை துவக்க விழா நேற்று நடந்தது. இதில், தமிழக கவர்னர் ரோசைய்யா பேசியதாவது: திருவையாறின் ஆற்றங்கரையில், தூய்மையான, தெய்வீகமான இடத்தில், தியாகராஜர் கீர்த்தனைகள் பாடப்படுகிறது. உலகின் மொழியாக இசை உள்ளது. அந்த இசையில் அற்புதமான கீர்த்தனைகளை வடித்தார் தியாகராஜர். அவரது கீர்த்தனைகளை கேட்கும்போதும், ஒவ்வொருவரது மனதுக்குள்ளும் புத்துணர்வு ஏற்படும். மனிதநேயத்தை வளர்க்கக்கூடியதாக, அவரது கீர்த்தனைகள் உள்ளது. அவர் எதார்த்த தத்துவவாதியாகவும், எளிமையான பண்பும், அழகிய பாடல்களை இயற்றக்கூடியவராகவும் விளங்கினார். பெங்களூருவை சேர்ந்த நாகரத்தினம்மாள் என்பவர், தியாகராஜர் கீர்த்தனைகள் உலகப்புகழ் பெற பங்களிப்பு செய்துள்ளார். காவிரி ஆற்றங்கரையில் நடக்கும் ஆராதனை மூலம் மன அமைதி கிடைக்கிறது. தெலுங்கு பேசும் பெரும்பான்மையானவர்கள், தியாகராஜர் கீர்த்தனைகளை பாடுகின்றனர். அவர்களும், காவிரி ஆற்றங்கரையில் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மூப்பனார், தியாகராஜர் ஆராதனை விழாக்குழு தலைவராக, 1966ம் ஆண்டு முதல், 36 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, தியாகராஜர் கீர்த்தனைகளை தேசிய அளவில், பிரபலப்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார். மத்திய அமைச்சர் வாசன், தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.