பதிவு செய்த நாள்
29
ஜன
2013
10:01
சென்னை: தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய வரலாற்று சின்னங்களின் கறுப்பு, வெள்ளை புகைப்படங்கள், நவீன காலத்திற்கேற்ப, டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக அரசு, 21 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கிஉள்ளது. தமிழக அரசால், 1961ம் ஆண்டு, தொல்லியல் துறை துவங்கப்பட்டது. இதில், பண்டைய வரலாற்று சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், முறையான அகழாய்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட, நன்னிலம், திருவீழிமிழலை, சென்னை மாநகர், தமிழ் - பிராமி, தமிழ்நாட்டு கல்வெட்டுகள் - தொகுதி 1, என, 27 கல்வெட்டுகள் தொகுப்புகள், நூலாக பதிப்பித்தும் வெளியிடப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அரண்மனை, மதுரை மகால், பூம்புகார், கொற்கை, வாசவ சமுத்திரம், பண்டைய காசுகள், திருகோவிலூர், தரங்கம்பாடி உள்ளிட்ட, 5,000க்கும் மேற்பட்ட கறுப்பு, வெள்ளை புகைப்படங்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, நவீன நிகழ்படங்களாக மாற்றப்பட்டு, "சிடியில் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக, 21 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொல்லியல் துறை ஆணையர் வசந்தி கூறுகையில், ""நவீன காலத்திற்கேற்ப, தொல்லியல் கண்டுபிடிப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனால், வரலாற்று சின்னங்கள், பதிவுகள் அழியாமல் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படும், என்றார்.