பதிவு செய்த நாள்
29
ஜன
2013
11:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய விழாவான மஹா தரிசனம், 31ம் தேதி நடக்கிறது. அன்று முருகப்பெருமானை தரிசிக்க சென்னிமலை நகரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழம் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் சுமந்து வந்து முருகனை வணங்கி செல்வர். பக்தி பரவசத்துடன் மேளதாளம் முழுங்க சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர். இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று நிலை சேர்ந்தது. இன்று செவ்வாய் இரவு பரிவேட்டை, குதிரை வாகன காட்சி நடக்கிறது. புதன்கிழமை இரவு தெப்போற்சவம், பூதவாகனக்காட்சி நடக்கிறது. மஹா தரிசனமான வியாழக்கிழமை (31ம் தேதி) அன்று காலை வள்ளி,தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு நடராஜபெருமானும். சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா காட்சி இரவு முழுவுதும் நடக்கும். இதை காண, சென்னிமலை நகரில் லட்சக்கனக்காண பக்தர்கள் கூடுவர். அன்று அதிகாலை, 5 மணி வரை ஸ்வாமி திருவீதி நடக்கும். வெள்ளிக்கிழமை மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் பசவராஜன் மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.