பதிவு செய்த நாள்
30
ஜன
2013
10:01
நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது நாட்டுக்கு நாடு வேறுபடும். அவ்வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுட்டுக்கொல்லப்பட்ட ஜன., 30ம் தேதி, இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு, பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இதற்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. தொடக்கம் முதல் கடைசி வரை "அகிம்சை கொள்கையில் இருந்து, அவர் விலகவே இல்லை. இவரது அகிம்சை கொள்கை, இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
2 நிமிட மவுன அஞ்சலி: டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது தியாகத்தையும், சேவைகளையும் நினைவுபடுத்தும் வகையில், இன்று காலை 11 மணிக்கு, நாடு முழுவதும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. மறைந்த தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், அவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறையை பின்பற்ற உறுதி ஏற்போம்.
1,015 குழந்தைகளுக்கு 40 நிமிடத்தில் மொட்டை: கும்மிடிப்பூண்டி: உலக சாதனைக்காக, காந்தி உலக மையம் சார்பில், இன்று சென்னை மெரீனா கடற்கரையில், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், காந்தி வேடம் அணிந்து ஊர்வலமாக செல்ல உள்ளனர். அதற்காக நேற்று, 40 நிமிடத்தில், 1,015 குழந்தைகளுக்கு மொட்டை அடித்து புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், காந்தி உலக மையம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. மகாத்மா காந்தியின் நினைவு பொருட்கள் மூலமாக, அவரது உயரிய கருத்துகளை மாணவர்களிடமும், இன்றைய சமுதாயத்தினரிடமும் கொண்டு செல்வதே, அந்த அமைப்பினரின் நோக்கம்.காந்தியின், 65வது நினைவு நாளான இன்று, உலக சாதனைக்காக, 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, மொட்டை அடித்து காந்தி வேடமிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில், ஊர்வலமாக செல்ல உள்ளனர். அதற்காக மொட்டை அடிக்கும் நிகழ்வு, கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் நேற்று நடந்தது. ஆர்வத்துடன் பங்கேற்ற, 1,015 மாணவ, மாணவியருக்கு, 138 பேர்களை கொண்டு, 40 நிமிடத்தில் மொட்டை அடிக்கப்பட்டது.இதன் மூலம், புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியா மற்றும் தமிழக சாதனைக்கான சான்றிதழ்களை, அமைப்பின் நிறுவனர் ராஜேஷிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில் நிகழ்வின் பதிவு, கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.