பதிவு செய்த நாள்
30
ஜன
2013
10:01
தஞ்சாவூர்: திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, ஒரே இடத்தில், நாடு முழுவதும் இருந்து, பல நூறு கலைஞர்கள் சங்கமித்துள்ளனர். இவர்கள், நேற்று மூன்றாம் நாளாக ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்தனர். தஞ்சை மாவட்டம், திருவையாறில் ஆண்டுதோறும் சற்குரு தியாகராஜரின், ஆராதனை விழா நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு, 166வது ஆராதனை விழா, கடந்த, 27ம் தேதி, தமிழக கவர்னர் ரோசய்யா துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தினமும், வரும், 31ம் தேதி வரை இசைக்கலைஞர்கள் இசை விருந்து படைக்கவுள்ளனர். மூன்றாம் நாளான நேற்றுக்காலை, 9 மணிக்கு முதல் நிகழ்வாக செட்டிக்குளம் கொளஞ்சியப்பன், சாரதாம்பாள் நாதஸ்வரம், சரவணன், குரும்பவூர் சதீஸ் தவிலும் இசைத்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், முகர்சிங், கஞ்சிரா, புல்லாங்குழல், வீணை, கிளாரினெட், கீஃபோர்டு, கடம், தபலா என, பலவித இசைக்கருவிகளை மீட்டி, கலைஞர்கள் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர். சோளிங்கர் நாராயணமூர்த்தி, இடைப்பாடி திருஞானம், கோட்டூர் சிவக்குமார், கோவை வேணுகோபால் குழுவினர், சிதம்பரம் நந்தி மிருதங்க வித்யாலயா, திருவையாறு அரசு இசைக்கல்லூரி, சீர்காழி அரசு இசைப்பள்ளி, சிதம்பரம் ஸங்கீத வித்யாலயம் பள்ளி, செல்வரத்தினம், விஜயராகவன், ஸ்ரீராம் சாஸ்திரி, அனுரூபா, சுஜித் கிருஷ்ணன், குமாரி பிரகுமதி, மஞ்சுரேகா, சுந்தரி, அர்ச்சனா, உஷாராமன், சவுந்தர்யா, முரளிசர்மா, ஹரிணி, ஹேமநாதன், மிருதுளா நாராயணன், இந்து, ஆரோபிந்த் ரவி, நீலாயதாட்சி, காயத்ரி, முத்துக்குமார், பிரியதர்ஷனி, அஞ்சலிநாயர், ஜீவிதா, சவும்யா, சுப்பிரமணியம், சீனிவாசன், பாலசுப்பிரமணியன், கோவிந்தராஜன், சங்கீதா அஸ்வத்நாராயணன், ஜெயஸ்ரீ, சத்தியநாராயணா உள்பட, பல நூறு இசைக்கலைஞர்கள் பல்வேறு இசை நிகழ்ச்சி நடத்தினர். திருவையாறு பல நூறு இசைக்கலைஞர்களின் சங்கமமாக காட்சியளித்தது. இதைத்தொடர்ந்து, இன்று காலை, ஒன்பது மணிக்கு கிருஷ்ணகிரி பாரத், அசோக் நாதஸ்வரம், சுப்பிரமணியன், செந்தில் தவில் இசையுடன் நான்காம்நாள் நிகழ்ச்சி துவங்குகிறது. ஏற்பாட்டை ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா நிர்வாகிகள் செய்துள்ளனர்.