பதிவு செய்த நாள்
30
ஜன
2013
11:01
கூடுவாஞ்சேரி: நந்திவரம் ஸ்ரீ நந்தீசுவரர் கோவில் முகப்பில், குப்பை குவிந்து கிடப்பது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், நந்திவரம் பகுதியில், அருள்மிகு சௌந்தர நாயகி உடனாய நந்தீசுவரர் திருக்கோவில் அமைந்துஉள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலின் கிழக்கு நுழைவாயில் அருகே, நந்தீசுவரர் நகர் செல்லும் பிரதான சாலையில், சமீப காலமாக குப்பை கொட்டப் படுகிறது. அவை அகற்றப்படாமல் குவிந்துள்ளதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இது பக்தர்களிடையே, முகச் சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மோகன் கூறியதாவது: நந்தீசுவரர் கோவில், அப்பர், சுந்தரர் ஆகியோரால், பாடப்பட்ட ஸ்தலம். இங்குள்ள சிலர், கோவிலை சுற்றியுள்ள நிலத்தை ஆக்கிரமித்து, குடிசைகள் அமைத்துள்ளதுடன், கழிவுகளை அருகில் உள்ள கோவில் குளத்தில் விடுகின்றனர். இதனால், குளம் மாசடைந்து, தூர்ந்து போகும் நிலையில் உள்ளது. தற்போது கோவிலின் முகப்பில், குப்பைகள் கொட்டப்படுவதால், கோவில் பொலிவு குறைவதுடன், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அத்துடன், அருகில் உள்ள குளத்தில் குப்பைகள் விழுவதால், நீர் மாசடைகிறது. எனவே, குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், குளத்தை பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் வடிவேலுவிடம் கேட்டபோது, பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.