பதிவு செய்த நாள்
01
பிப்
2013
10:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் அமைந்துள்ள, கூரத்தாழ்வான் கோவிலில், நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. கூரத்தாழ்வான் 1,003வது மகோத்சவம், கடந்த 23ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை, கூரத்தாழ்வான் வெவ்வேறு வாகனங்களில், வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 8:00 மணிக்கு, கூரத்தாழ்வான் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். காலை 8:45 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது. கோவிலிலிருந்து புறப்பட்ட தெரு, அரசமரத் தெரு, மேலாண்டை தெரு, யாதவர் தெரு வழியாக சென்று, பகல் 1:00 மணிக்கு, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு ஹம்ஸ வாகனம், திருமொழி சாற்றுமறை உற்சவம் நடந்தது.