பதிவு செய்த நாள்
01
பிப்
2013
10:02
தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜர் சுவாமி, 166வது ஆராதனை விழாவில், ஒரே நேரத்தில், 1,000 கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்று, பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து, இசை விருந்து படைத்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடத்தப்படும். கடந்த, ஐந்து நாட்களாக நடந்த ஆராதனை விழா, நேற்று நிறைவடைந்தது. திருவாரூரில், ராமபிரம்மம், சீதம்மா தம்பதிக்கு, 1767 மே, 4ம் தேதி, தியாகராஜர் சுவாமி பிறந்தார். எட்டு வயதிலேயே இசைஞானம் பெற்று, இசைஞானியாக திகழ்ந்தார். ராமபக்தராக விளங்கினார்; சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படுகிறார். இவர், தெலுங்கு மொழியில் எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றினார். இதில், பஞ்சரத்ன கீர்த்தனை புகழ்பெற்றது. இறுதியாக, 1847 ஜன., 6ம் தேதி, தை மாதம் பகுள பஞ்சமி திதியில், தியாகராஜர் சுவாமி, திருவையாறில் முக்தி அடைந்தார். முக்தி தினமான நேற்று, காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, பிரதான நிகழ்ச்சியில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை, 1,000த்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள், பாடகர்கள் ஒரே நேரத்தில் இசைத்தனர். ஆராதனை விழாவில், தனித்தனியாக பிரபல சினிமா பாடகர்கள் ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், சீர்காழி சிவசிதம்பரம், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன் ஆகியோர், பாடல்களை பாடி பரவசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனையில், முன்வரிசையில் சிவ சிதம்பரம், சுதா ரகுநாதன் மற்றும் கலைஞர்கள் மகதி, அருண், சுமா சுசித்ரா, கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, ப்ரியா சகோதரிகள் பாடினர். முன்னதாக, காலை, 7:00 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, அவரது சமாதியில் எழுப்பப்பட்ட சிலையை வந்தடைந்து தீபாராதனை, பூஜை, வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, இரவில் ஆஞ்சநேய உற்சவத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.