பதிவு செய்த நாள்
02
பிப்
2013
11:02
கும்பகோணம்: திருநரையூர் சித்தநாதஸ்வாமிகோவில் மஹா கும்பாபிஷேகத்தில், திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் முன்னிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள திருநரையூரில் சௌந்திரநாயகி உடனாய சித்தநாதசுவாமி கோவில் உள்ளது. மஹாலெட்சுமி அவதார தலமாக போற்றப்படும் இங்கு மேதாவி என்ற மகரிஷி சித்தநாதரை நோக்கி தவம்செய்து, திருமகளான லட்சுமியை மகளாக பெற்று வஞ்சுளவல்லி நாச்சியார் என்ற பெயரோடு, திருமால் ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருமணம் செய்து வைத்ததால், நாச்சியார்கோவில் என பெயர் வந்தது.பாண்டிய மன்னன் சந்திரகுப்தனுக்கு ஏற்பட்டுள்ள குஷ்டரோகத்தை சித்தநாதஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணையால், அவரது நோய் நிவர்த்தியானதாக புராணம் கூறுகிறது. இன்றும் பலர் நோய் நிவர்த்திக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பழுதடைந்தவைகளை நீக்கி, பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.கடந்த மாதம், 30ம் தேதி, முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. 31ம் தேதி காலை, இரண்டாம் காலமும், மாலை, மூன்றாம் காலமும் யாகசாலை பூஜைகள் நடந்தது. பிப்.1 காலை, 6 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை, 8 மணிக்கு கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் நடந்தது. 8.40 மணிக்கு கடங்கள் புறப்பட்டது. திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் எஜமான்சுவாமிகள் வருகை தந்தார்.காலை 9.05 மணிக்கு மூலவர் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. 9.15 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஹாபிஷேகம் நடந்தது. கோவிலில் வெளியே பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையில், திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு, 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. டி.ஜி.நடராஜசிவாச்சாரியார் தலைமையில் திரளான சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.