பொதிகை மலையில் மீண்டும் துளிர்க்கும் மூலிகை செடிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2013 10:02
தென்காசி: குற்றாலத்தில் அரிய வகை மூலிகை செடிகள் துளிர்க்க துவங்கியுள்ளன. சித்தர்களில் முதன்மையானவரான அகத்தியர் அருள்பாலிக்கும் பொதிகை மலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. பொதிகை மலை முழுவதும் பல்வேறு மூலிகை செடி, கொடிகள், மரங்கள் நிறைந்து காணப்பட்டன. தற்போது சுமார் 400 வகையான மூலிகை செடிகளே காணப்படுகின்றன. மற்ற மூலிகை செடிகள் அழிக்கப்பட்டு விட்டன.தற்போது பொதிகை மலையில் அபூர்வ மூலிகை செடிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முளைத்து பூத்துள்ளன. பாறைகளுக்கிடையே அபூர்வமாகவும், அதிசயமாகவும் வளரும் கல்தாமரை மற்றும் பூனைக் காலி, அழுகண்ணி மற்றும் சாம்பிராணி பூ, கஸ்தூரி மஞ்சள், தேவதாரு போன்ற மூலிகை செடிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு பொதிகை மலையில் மீண்டும் வளர்ந்து பூத்துக் குலுங்குகின்றன. அழுகண்ணி மூலிகை செடிக்கு சமஸ்கிருதத்தில் சவ்யகரணி என்ற பெயரும் உண்டு. உடலில் வெட்டுக் காயம் ஏற்பட்டால் இதன் இலைகளை வைத்து கட்டினால் வெட்டுப்பட்ட இடம் ஒன்று சேர்ந்துவிடும். இதை சூரணம் செய்து சாப்பிடுவர். ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வது, என்றும் மார்க்கண்டேயன் ஆக வழிவகுக்கும். இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. பாறைகளுக்கிடையே அபூர்வமாய் வளரும் கல்தாமரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஈரப்பசை உள்ள பகுதிகளில் வளரும் பூனைக் காலி நோய் வராமல் பாதுகாக்கவும், தொற்று நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது. மூலிகை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே மூலிகை அழிந்து வருவதற்கான காரணம். இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை பற்றி பாடத்திட்டத்தில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.