பதிவு செய்த நாள்
08
பிப்
2013
12:02
திருநெல்வேலி: ரத சப்தமி மஹோத்ஸவமான 17ம் தேதி டவுன் கரிய மாணிக்க பெருமாள் ஒரே நாளில் 7 விதமான அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். சூரிய பகவான் ரத சப்தமியன்று தன் கிரணங்களை(ஒளியை) உத்திராயணத்தை(வடக்கு)நோக்கி செலுத்துகிறார். நம் முன்னோர்கள் இதை சூரிய, சந்திர விரதமாகவும், சூரிய நாராயணனாக மகா விஷ்ணுவையும் வணங்கினர். இச் சிறப்பு பெற்ற ரத சப்தமி மஹோத்ஸவமான 17 ம் தேதி தமிழகத்திலேயே நெல்லை டவுன் கரிய மாணிக்க பெருமாள் கோயிலில் மட்டுமே 7 வாகனங்களில் சப்தமி திருவிழா நடக்கிறது. வரும் 17 ம் தேதி காலை 6 மணிக்கு டவுன் கரியமாணிக்க பெருமாள் கோயிலில் பெருமாள் சூர்ய நாராயண பெருமாள் அலங்காரத்தில் சூர்ய பிரபா வாகனத்திலும், 8 மணிக்கு வேத நாராயண பெருமாள் அலங்காரத்தில் ஸ்ரீகருட வாகனத்திலும், 11 மணிக்கு சேஷ நாராயணப் பெருமாள் அலங்காரத்தில் ஸ்ரீ சேஷ வாகனத்திலும் எழுந்தருளவுள்ளார்.
பெருமாளுக்கு திருமஞ்சனம்: இதனையடுத்து மதியம் ஒரு மணிக்கு கரியமாணிக்க பெருமாளுக்கு திருமஞ்சனமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது. 4.30 மணிக்கு ராம நாராயண பெருமாள் அலங்காரத்தில் ஸ்ரீஹனுமந்த வாகனத்திலும், இரவு 7 மணிக்கு வைகுண்ட நாராயணப் பெருமாள் அலங்காரத்தில் இந்திர விமானத்திலும், 9 மணிக்கு சீனிவாச பெருமாள் அன்ன வாகனத்திலும், 10.30 மணிக்கு வெங்கடநாராயண பெருமாள் அலங்காரத்தில் ஸ்ரீசந்திர பிரபா வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். ரத ஸப்தமி விழாவில் டவுன் சுப்பிரமணிய கம்பரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சி நடக்கிறது.