பதிவு செய்த நாள்
09
பிப்
2013
10:02
சென்னை: தமிழகத்தில், மூன்று கோவில்கள் உட்பட, நான்கு இடங்களில், பயோகாஸ் நிலையங்கள் நிறுவ, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை ஒப்பந்தம் கோரியுள்ளது. மதுரை, நெல்லை, திருச்சி உட்பட பல மாவட்டங்களில், பிரசித்தி பெற்ற வழிப்பாட்டு தலங்கள் உள்ளன. இந்த கோவில்களில், அர்ச்சனைக்கு பூ மற்றும் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.நாள்தோறும் பயன்படுத்தும் பூ மற்றும் பழங்கள் விட, பண்டிகை நாட்களில், அதிகளவில் அர்ச்சனைக்கு, பூ மற்றும் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய கோவில்களில், சூற்றுச்சூழல் மாசுபடும் அளவிற்கு, அதிக கழிவுகள் தேங்குகின்றன. மேலும், அன்னதானம் தயாரிக்கும் சமையலறை பகுதிகளிலும், கழிவுகள் குவிகின்றன.இதை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக, அரங்கநாத சாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம்; தண்டாயுதபாணி சாமி திருக்கோவில், பழனி; தேவி கருமாரி திருக்கோவில், திருவேற்காடு உட்பட மூன்று கோவில்களில், பயோகாஸ் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. மேலும், ராஜ்பவனிலும் பயோகாஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. மூன்று கோவில்கள் உட்பட நான்கு இடங்களில், பயோகாஸ் நிலையங்கள் நிறுவ, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை ஒப்பந்தம் கோரியுள்ளது.பயோகாஸ் நிலையங்களை அமைக்கும் நிறுவனங்கள், அதை நிறுவுவதோடு மட்டுமில்லாமல், பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என, ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.