பொட்டல்புதூரில் கந்தூரி விழா இன்று சந்தனக் கூடு ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2013 11:02
ஆழ்வார்குறிச்சி: பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் இன்று (21ம்தேதி) இரவு சந்தனக் கூடு ஊர்வலம் நடக்கிறது. பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் ஆண்டு தோறும் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு கந்தூரி விழா கொடியேற்றம் கடந்த 11ம் தேதிபகல் 2மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழூர் ஜமாத் நிறைபிறை கொடி மேளதாளம் வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலை பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தீன் ஒலி முழங்க கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து நேற்று 20ம் தேதி பச்சை களை ஊர்வலம் நடந்தது. இன்று (21ம் தேதி) காலை 10 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், 2 மணிக்கு மேலூர் ஜமாத் 10ம் இரவு கொடி ஊர்வலமும் மாலை 6மணிக்கு கொடியேற்றம் கோலாகலமாக நடக்கிறது. இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன் செல்ல மேளதாளம் முழங்க ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக் கூடு ஊர்வலம் புறப்பட்டு நாளை (22ம் தேதி) அதிகாலை பள்ளிவாசல் வந்தடைகிறது. பின்னர் காலை 5 மணிக்கு எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தமிழக வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், எம்எல்ஏக்கள், ராஜேந்திரன் (ஆலங்குளம்), இசக்கிசுப்பையா (அம்பை),சீனிவாசன் (ஆற்காடு) முன்னிலையில் தீப அலங்காரத்தை துவக்கி வைக்கிறார். 24ம் தேதி மாலை 14ம் நாள் இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி அதிகாலை 5மணிக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா, கமிட்டி உறுப்பினர்கள் வக்கீல்கள் முகம்மது ரபி, சம்சுதின் மற்றும் மேனேஜிங் கமிட்டியினர், பள்ளிவாசல் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.