பதிவு செய்த நாள்
22
பிப்
2013
11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவிலில், வரும் 25ம் தேதி, ஆறாம் ஆண்டு மாசிமக மண்டகப்படி திருவிழா நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் நிமந்தகார ஒத்தவாடை தெருவில், அமரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மகம் அன்று, ஏகாம்பரநாதர் ஏலவார்குழலியுடன் எழுந்தருள்வார். இந்நிகழ்ச்சி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும், 25ம் தேதி மாசிமக மண்டகப்படி விழா நடைபெற உள்ளது. அன்று காலை 9:00 மணிக்கு, ஏகாம்பரநாதர் ஏலவார் குழலியுடன், திருவலம் பூத கணநாதர் கொட்டாட்டு பாட்டு குழுவினரின் சிவபூத கணவாத்தியங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, நான்கு ராஜவீதிகள் வழியாக, அமரேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருள்வார். கோவிலில் மாலை 5:30 மணிக்கு, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும். காலை மற்றும் மாலை திருமுறை வீதி பாராயணம் நடைபெறும். இரவு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புறப்பட்டு செல்வார். இதற்கான ஏற்பாடுகளை நிமந்தகார ஒத்தவாடை தெரு மக்கள் செய்துள்ளனர்.