பதிவு செய்த நாள்
22
பிப்
2013
11:02
பட்டுக்கோட்டை: மர்மமாக இறந்த கோவில் காளை உடலை சம்பிரதாயப்படி அடக்கம் செய்து, பொதுமக்கள் வழிபட்டனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டாக்குடியில், அய்யனார் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட காளை மர்மமான முறையில் இறந்தது. இதனால் அய்யனார் பக்தர்கள், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து கிராமத்தினர் இறந்த காளையை, குளிப்பாட்டினர். தொடர்ந்து உடலுக்கு சந்தனம் தடவி, மாலை அணிவித்து தாரை தப்பட்டை உட்பட, சகல மரியாதையுடன் காளையின் உடலை "சம்பிரதாயப்படி முறைகளை செய்து, நல்லடக்கம் செய்தனர். இது பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காளை, அப்பகுதி அய்யனார் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டு, சுற்று வட்டாரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வந்தது. இதை அந்த கிராம மக்கள் அன்புடன் வளர்த்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராமல் கோவில் காளை இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ""வயலில் விளைந்திருந்த நெற்பயிரை அதிகளவில் தின்றதால், கோவில் காளை இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. அன்புடன் வளர்த்த காளை இறந்ததை தொடர்ந்து, கிராம மக்கள் சார்பில், அய்யனார் கோவிலில் காளை சிலை ஒன்றும் அமைத்து வழிபட ஏற்பாடு செய்யப்படும், என்றனர்.