பதிவு செய்த நாள்
23
பிப்
2013
10:02
திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தார்.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மாசிதிருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று 7ம் திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்துசேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பின்னர் மாலை யில் சுவாமி தங்கசப்பரத்தில் சிவப்பு பட்டு அணிந்து,சிவப்பு மாலை அணிந்து சிவப்பு சாத்திகோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் இன்று 8ம் திருவிழாவின முன்னிட்டு அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி வீதிஉலாவும்,அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிமுதல் 11.30 மணிக்குள் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்திகோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோயில் வந்துசேருகிறார்.வரும் 24ம் தேதி 9ம் திருவிழாவினை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர்(பொ) ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா உட்பட கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.