பதிவு செய்த நாள்
23
பிப்
2013
10:02
ஐதராபாத்: ஆடம்பரமான கடிகாரங்கள் தயாரிப்பதில் பிரபலமாக விளங்கும், சுவிட்சர்லாந்தை சேர்ந்த,"செஞ்சுரி டைம்ஸ் நிறுவனம், திருப்பதி வெங்கடாஜலபதி உருவம் பதித்த, புது ரக கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, 27 லட்சம் ரூபாய். இந்த கைக்கடிகாரத்தில், ரத்தினம், மரகதம், சிவப்பு கல் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, 333 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. கடிகாரத்தின் முகப்பு பகுதியில், திருமலை வெங்கடாஜலபதி உருவமும், பின் பகுதியில் திருமலை கோவிலின் விமான கோபுரம் தங்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. விற்பனையாகும் ஒவ்வொரு கடிகாரத்தின் தொகையில், குறிப்பிட்ட சதவீதத்தை, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால், திருப்பதியில் நடத்தப்படும் ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்க, சுவிஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த கடிகாரத்தின் அறிமுக விழா, ஐதராபாத்தில் நடந்தது. இதில், திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்ரமணியம் கலந்து கொண்டார்.