பதிவு செய்த நாள்
23
பிப்
2013
11:02
தமிழகத்தில், ஆன்மிகமும், பாரம்பரியமும் நிறைந்த மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்று. சுற்றுலா வரும் பயணிகள் கடவுளின் அருளை பெறுவதோடு, மனதிற்கு இதம் அளிக்கும் பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்களை ரசித்தாலே, மனம் லேசாகும். அந்தளவிற்கு, இங்கு, ஆன்மிகமும், பாரம்பரியமும் கைகோர்த்து வீறு நடைபோடுகிறது. பாரம்பரிய கட்டட கலைகளுக்கு பெயர் பெற்ற, செட்டிநாடு பங்களாக்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, நகரத்தார்களால் கட்டப்பட்டது. செட்டிநாடு, கானாடுகாத்தான், காரைக்குடி, கொத்தமங்கலம், ஆத்தங்குடி, கோட்டையூர், பள்ளத்தூர் போன்ற இடங்களில் உள்ள பாரம்பரிய பங்களாக்கள் புகழ் பெற்றவை. கானாடுகாத்தான் பங்களா 1912ல் கட்டப்பட்டது. பர்மா தேக்குகளால் ஆன தூண்கள், தரைகளில் இத்தாலி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டவை. பங்களாக்களை பெல்ஜியம் கண்ணாடிகள் அலங்கரிக்கின்றன. தவிர, காரைக்குடியில் தமிழ்த் தாய்கோயில், கம்பன் மணிமண்டபம், அழகப்பர் சிலை, கண்ணதாசன் மணி மண்டபம் ஆகியவை பாரம்பரிய நகருக்கு சிறப்பு சேர்ப்பவை. குறிப்பாக, காரைக்குடி ஆயிரம் ஜன்னல் வீடு பார்க்கவேண்டிய இடம்.
இவை தவிர்த்து, ஆன்மிக சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில், காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் 120 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட திருஇருதய ஆலயம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில், குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில், வைரவன்பட்டி வைரவர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில், கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் கோயில், சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கை பாகர் கோயில்கள் உட்பட ஏராளமான பிரசித்தி பெற்ற கோயில்களும் இங்கு உண்டு. கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில், திருப்புத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளது. இப்பாரம்பரிய பங்களாக்கள் நிறைந்த, ஆன்மிக மணம் கமழும் சிவகங்கை மாவட்டத்தை சுற்றிப்பார்க்க ஆர்வமுடன் வந்தால், தெய்வ அருளுடன், பாரம்பரிய கலைகளை அறிந்த பெருமையையும் பெற்றுச்செல்லலாம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை, இந்த பாரம்பரிய நகரம் ஈர்த்ததால், யுனஸ்கோவரைபடத்தில் இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது. சிவகங்கையில் தங்கி, இங்கிருந்து 30 கி.மீ., சுற்றளவிற்குள் இருந்தே நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி, காளையார்கோயில், தாயமங்கலம், இடைக்காட்டூரில் உள்ள கோயில், ஆலயங்களை பார்வையிடலாம். காரைக்குடியில் தங்கி, அங்கிருந்து 25 கி.மீ., சுற்றளவிற்குள் பாரம்பரிய பங்களாக்கள் நிறைந்த கானாடுகாத்தான், ஆத்தங்குடி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி போன்ற இடங்களை பார்வையிடலாம்.
மேலும் விபரங்களுக்கு..
சுற்றுலாத்துறை அலுவலர் : 94877 25687.
தங்குமிடம்: சிவகங்கை: சண்முகபவன் - (04575) 240 432,
பி.எல்.எஸ்.,லாட்ஜ்- 240 488,
சுபம் லாட்ஜ் - 240 452.
காரைக்குடி: எம்.எஸ்.எம்., பங்களா (04565) 220 221,
சுபலட்சுமி பேலஸ் - 237 010,
கோல்டன் சிங்கார் - 235 521,
ஓட்டல் சுகம் இன்டர்நேஷனல் - 237 051,
மலர் ஓட்டல் - 239 604,
உதயம் ஓட்டல் - 223 323,
செட்டிநாடு மேன்சன் - 273 080ல் தொடர்பு கொள்ளலாம்.