பதிவு செய்த நாள்
25
பிப்
2013
10:02
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் 40 லட்சம் ரூபாயில் தயாரித்த புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. காரைக்கால் கைலாசநாதர் கோவிலுக்கு நிரந்தர தேர் இல்லாததால், பிரம்மோற்சவ விழாவின்போது தற்காலிக தேர் செய்து திருவிழா நடந்தது. இக்கோவிலுக்கு நிரந்தர தேர் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நாஜிம் எம்.எல்.ஏ., முயற்சியால் 10 லட்சம் ரூபாய் அரசு உதவி மற்றும் 30 லட்சம் ரூபாய் பக்தர்கள், உபயதாரர்கள் நன்கொடை மூலம் 40 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தேர் தயார் செய்யும் பணி நடந்தது.இரண்டு ஆண்டுகள் நடந்த தேர் தயாரிப்பு பணி முழுமையாக முடிந்தது. இதில், திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரித்த 4 இரும்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதன், 21 அடி உயரமும், 15 அடி அகலமும் கொண்டது. 60 டன் எடையுடன் 6 நிலைகொண்ட தேராக தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய தேரில், 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் மரச்சிற்பங்கள், சிவபெருமான் மரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. சிம்மாசன பீடத்தை சுற்றி அஷ்ட லட்சுமிகள் திருவுருவங்கள் என 258 மரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று முன் தினம் நடந்தது. காலை 10 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து நாஜிம் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி, எஸ்.பி., வெங்கட சாமி வடம் பிடித்து தேரை இழுத்து துவக்கி வைத்தனர். புதிய தேர் பாரதியார் சாலை, கென்னடியார் வீதி, மாதாக்கோவில் வீதி வழியாக சென்று நிலையை அடைந்தது. வரும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவான மார்ச் 25ம் தேதி தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடக்கவுள்ளது.