பதிவு செய்த நாள்
25
பிப்
2013
10:02
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த மயான பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை, நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. அங்கு, எட்டு அடி நீளத்துக்கு மயான மண்ணால், மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத் துண்டை வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார். ஆடிக் கொண்டே அம்மன் உருவத்தை சிதைத்தார். அப்போது, அம்மனின் கழுத்துப் பகுதியில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டது. பின், பின்னிரவு 2:45 மணிக்கு மயான பூஜை முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிலர் அருள் வந்து ஆடினர். எஸ்.பி., உமா தலைமையில், 100க்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.