பதிவு செய்த நாள்
25
பிப்
2013
11:02
சென்னை: இந்தியா முழுவதும் ஒரு முறை ஆன்மிக சுற்றுலா சென்ற உணர்வு கிடைத்தது என, இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சிக்கு சென்றவர்கள் கூறினர். விவேகானந்தரின், 150வது பிறந்த நாளையொட்டி, இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் கடந்த, 19ம் தேதி துவங்கி, நேற்று நிறைவுற்றது. கண்காட்சியில், 240க்கும் மேற்பட்ட அமைப்புகள், காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், ஆன்மிகம், தொடர்பான புத்தகங்கள், குறுந்தகடுகள், பாரம்பரிய விளையாட்டுகள், இயற்கை உரத்தில், தயாரான விளை பொருட்கள், மூலிகை செடிகள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில், புகழ் பெற்ற கோவில்களில் உள்ள, லிங்கங்கள் கண்காட்சியில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய அரங்கில் இருந்த, பல்லாங்குழி, குச்சி எடுத்தல், தட்டாங்கல், பரமபதம், கிச்சுகிச்சு, தர்பார், பாண்டி போன்ற, விளையாட்டுகளை சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை, ஆர்வமாக விளையாடினர். பசுஞ்சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து தயாரான இயற்கை உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவற்றை, வீட்டு தோட்டம் பராமரிப்போர் வாங்கி சென்றனர். மேலும், இயற்கை உரத்தில் தயாரான உணவு பொருட்கள், அழகு சாதனங்களையும் வாங்கினர். திருவோடு, கல்காரம், ருத்ராட்சம், செங்கற்றாழை, பன்னீர்மரம் போன்ற, 500க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் இருந்தன. பெரும்பாலோர் ஒரு மூலிகை செடியையாவது வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. அரங்கத்தின் வெளியே, சிறுவர்களின் பஜனை நிகழ்ச்சி மற்றும் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்காட்சியை பார்க்க வந்தவர்கள், இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுலா சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டதாக, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.