பதிவு செய்த நாள்
25
பிப்
2013
11:02
காஞ்சிபுரம்: நூறு ஆண்டுகளுக்கு பின், தூர் வாரும் பணி நடந்து வரும் ஐயங்கார்குளம், சஞ்சீவிராய சுவாமி கோவில், நடவாவி கிணற்றில், இதுவரை மறைந்திருந்த, ஒரு பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையை காண, தினமும் ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து, செல்கின்றனர்.காஞ்சிபுரத்திலிருந்து, 8 கி.மீ., தொலைவில், ஐயங்கார்குளம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் புகழ்பெற்ற, சஞ்சீவிராய சுவாமி கோவில் உள்ளது. நடவாவி கிணறுஇக்கோவில் மிகவும் பழமையானது. விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ராவணனுடன் நடந்த போரில் மூர்ச்சை அடைந்த, ராம, லட்சுமணரை, உயிர்பிப்பதற்காக, ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றபோது, அதிலிருந்த ஒரு பகுதி, ஐயங்கார்குளம் கிராமத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோவில் பின்புறம், அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. குளத்தை சுற்றி அழகிய பாறைகள், அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவையே, குளத்தின் கரையாக திகழ்கின்றன. இப்பாறைகள், பார்ப்பதற்கு, ஆஞ்சநேயர் தனது வாலை சுற்றி, அதன் மீது உட்கார்ந்திருப்பதுபோல் காட்சி அளிக்கிறது. இக்குளம், "தாத சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
குளத்தின் பின்புறம் சற்று தொலைவில், புகழ்பெற்ற, "நடவாவி கிணறு உள்ளது. பூமிக்கடியில் அழகிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தின் நடுவில், கிணறு அமைந்துள்ளது. கிணற்று தண்ணீர் மண்டபம் முழுவதும் நிறைந்திருக்கும். மண்டபம் உள்ளே செல்வதற்கு, கருங்கல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின், நுழைவு வாயிலில், அழகிய வேலைப்பாடுடன் கூடிய, அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. மண்டபத் தூண்களில், அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிணற்றில், மேல்பகுதியிலிருந்து பார்த்தால், தண்ணீர் மட்டும் தெரியும்.ஆண்டுதோறும், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், ஐயங்கார்குளம், சஞ்சீவிராயர் கோவிலுக்கு எழுந்தருள்வார். பின்னர், நடவாவி கிணற்றின் உள்ளே எழுந்தருள்வார். பெருமாள் வருகையையொட்டி, கிணற்றில் இருந்த, தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, மண்டபம் தூய்மைப்படுத்தப்படும். பெருமாள் மண்டபம் உள்ளே எழுந்தருளியதும், தூப, தீப ஆராதனை நடைபெறும். பெருமாளை தரிசிக்க, ஏராளமானோர் வருவர்.தூர் வாரும் பணிநடவாவி உற்சவத்தின்போது மட்டும், கிணற்றின் மேல் பகுதியில், மண்டபத்திலிருக்கும் தண்ணீர் மட்டும், மின்மோட்டார் உதவியுடன் வெளியேற்றப்படும். கிணறு எப்போது தூர் வாரப்பட்டது, என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. தூர் வாரி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் என, கிராமத்தில் உள்ள, முதியவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கிணற்று நீர் மாசுபட்டு, துர்நாற்றம் வீசத் துவங்கியது. எனவே, கிணற்றை தூர் வார வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று கோவில் நிர்வாகம், பொதுமக்கள் உதவியுடன், நடவாவி கிணற்றை தூர் வாரும் பணியை துவக்கியது. கிணற்றை தூர் வாரியபோது, கிணற்றின் உள்ளே இறங்கி, மண்டபத்திற்கு மேலே ஏறும் பகுதிக்கு கீழே, கிணற்றுக்கு செல்ல, மற்றொரு வழி இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது. கிணற்றில் நீர் உள்ள பகுதியில் இந்த பாதை, தூர்ந்துபோய் மறைந்து இருந்தது. இதனால், வெளியில் இருந்து பார்க்கும்போது, தெரிய வில்லை. தூர்வாரும்போது இந்த பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடவாவி கிணற்றின் மேல் பகுதியை, கீழ்பகுதியுடன் இணைக் கும் வகையில் இப்பாதை அக்காலத் தில் அமைக்கப்பட்டு உள்ளது. நீர்மட்டம் குறையும் காலங்களில் இந்த பாதை பயன்படுத்தப்படும்.தூர் வாரும்போது ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த நாணயங்கள் கிடைத்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவற்றை சேகரிப்பதற்காக ஒரு கும்பல் அங்கு கூடுகிறது. மேலும் எலும்புகள், பானை ஓடுகள், போன்றவையும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.எதிர்பார்ப்புஇதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:நடவாவி கிணறு எப்போது தூர் வாரப்பட்டது என்பது தெரியவில்லை. இன்னும் தூர் வார வேண்டியுள்ளது. முழுமையாக தூர் வாரும்போது, கிணற்றுக்கும் சஞ்சீவிராயர் குளத்திற்கும் இடையே, பாதை இருப்பது தெரியவரும் என, திர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வரதராஜப் பெருமாள் கோவில், உதவி ஆணையர் தியாகராஜன் கூறியதாவது:பொதுமக்கள் உதவியுடன், நடவாவி கிணறு தூர் வாரப்படுகிறது. கடைசியாக இக்கிணறு எப்போது தூர் வாரப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. தூர் வாரியபோது, அரும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. மக்கள் உள்ளே நுழையாமல் இருக்க, கம்பி வேலி அமைத்து உள்ளோம். தூர் வாரும் பணி, ஓரிரு நாளில் நிறைவு பெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.