பதிவு செய்த நாள்
26
பிப்
2013
10:02
ஆனைமலை: கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் இறங்குதல் நடக்கிறது.மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கும். இந்த ஆண்டு கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை 6.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கடந்த 23ம்தேதி நள்ளிரவில் மயான பூஜையும், நேற்று முன்தினம் சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 40 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட குண்டம் இறங்க தயார் செய்யப்பட்டது.மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, முக்கியப்பகுதிகளின் வழியாக அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் இறங்குதல் இன்று காலை 8.30 மணிக்கு நடக்கிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்க உள்ளனர். குண்டத்திற்கான ஏற்பாடுகள் நேற்று காலை முதல் துவங்கியது.குண்டம் இறங்கும் இடத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக மூங்கில்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு 10.00 மணிக்கு குண்டத்தில் இறங்குவதற்காக பூ வளர்க்கப்பட்டது. வரும் 27ம் தேதி காலை 11.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8.00 மணிக்கு மகாமுனி பூஜையும், 28ம் தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிசேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் விழா நிறைவடைகிறது.குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோவில் தக்கார் குமரதுரை, உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர்கள் செந்தமிழ்செல்வன், சேகர், பொறியாளர் ராஜேந்திரன், மாசாணியம்மன் நற்பணிமன்ற தலைவரும், ஆனைமலை பேரூராட்சி தலைவருமான சாந்தலிங்ககுமார், தலைமை முறைதாரர் மனோகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக எஸ்.பி., உமா தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், நான்கு டி.எஸ்.பிக்கள்., 12 இன்ஸ்பெக்டர்கள், 120 சப்-இன்ஸ்பெக்டர்கள், 300 போலீசார், 75 ஊர்க்காவல் படையினர் நேற்று மாலையில் இருந்தே பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அசம்பாவிதங்கள் அல்லது அவசர உதவிக்கு வால்பாறை டி.எஸ்.பி., பழனிச்சாமி எண்: 94454-92333, ஆனைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன்: 93625-11200 ஆகிய எண்களுக்கும், ஆனைமலை ஸ்டேஷன் எண்: 04253-282230 என்ற எண்ணிலும் பக்தர்கள் தொடர்புகொள்ளலாம்.
தீயணைப்பு: பொள்ளாச்சி தீயணைப்பு நிலையம் சார்பாக 15 தீயணைப்பு வீரர்கள், ஒரு தீயணைப்பு வாகனமும் நேற்று இரவே குண்டம் நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டது. தனியார் மருத்துவமனை சார்பில் ஒரு இடத்தில் மருத்துவ வசதியும், அரசு மருத்துவமனை சார்பாக இரண்டு மருத்துவர் குழுவும் குண்டம் நடைபெறும் இடத்தில் இருக்கும். நான்கு 108 ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை பேரூராட்சி, ஒடையகுளம் பேரூராட்சி சார்பாக குடிநீர் வசதியும், மொபைல் டாய்லட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.