பதிவு செய்த நாள்
26
பிப்
2013
10:02
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நேற்று, தெப்பக் குளக்கரையில் பெண்கள் தீபமேற்றினர். பிப்.,16ல் கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கியது. 6ம் நாள் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவம் நடந்தது. நேற்று முன் தினம் பகலில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடந்தது. நேற்று, காலை 6 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்கப்பல்லக்கில் தெப்பக்குளத்திற்கு புறப்பட்டார். பகல் 12 மணிக்கு பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். இரவில் 10 மணிக்கு மீண்டும் பெருமாள் தெப்பம் எழுந்தருளி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் மும்முறை வலம் வந்தது. இன்று காலை தீர்த்தவாரி, மாலை ஆஸ்தானத்திற்கு பெருமாள் எழுந்தருளல் நடைபெறும். நேர்த்திக்கடன் விளக்கு சமர்ப்பித்தல் : தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பெண்கள் குளக்கரையில் தீபமேற்றி வழிபடுவது மாசித் தெப்ப உற்சவத்தில் பிரசித்தி. பிப்.,22ம் தேதி முதல் பெண்கள் தெப்பக்குளக்கரை மற்றும் சுற்றிலும் எண்ணெய் விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக நடந்த தெப்பத் திருவிழாக்களின் போது, தங்கள் வேண்டுதல் கோரிக்கைக்காக, பிறர் ஏற்றி, அணைந்த விளக்குகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, விளக்கை பெருமாளாக நினைத்து தினசரி வழிபடுகின்றனர். பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின், நிறைவேற்றியதற்கு பெருமாளுக்கு நன்றி தெரிவித்து, விளக்கை சமர்ப்பிக்கவே குளக்கரையில் தீபமேற்றுகின்றனர்.