பதிவு செய்த நாள்
26
பிப்
2013
10:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், வெள்ளி ரதம் வீதியுலா, வெகு விமரிசையாகநடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை, வெவ்வேறு வாகனங்களில், அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு, பிரபல உற்சவமான வெள்ளி ரதம் உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது. இரவு வெள்ளித்தேர் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு, காமாட்சியம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் எழுந்தருளினார். இரவு 9:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் வடம் பிடிக்க, வெள்ளித் தேர் வீதி உலா துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வடம் பிடித்தனர். தேருக்கு முன்பாக, இரண்டு யானைகள் அணிவகுத்து சென்றன. வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை வழிபட்டனர். கச்சபேஸ்வரர் கோவில் அருகே வாணவேடிக்கை நடந்தது. நேற்று காலை சரபம் உற்சவம், இரவு த்வஜாஅவரோஹணம் நடந்தது. இன்று இரவு மஹாமேரு உற்சவம் நடைபெற உள்ளது.