பதிவு செய்த நாள்
26
பிப்
2013
10:02
கும்பகோணம்: மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று அதிகாலை முதல், பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.வடக்கே கும்பமேளா போல், தெற்கே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது மகாமக திருவிழா. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், மக நட்சத்திரத்தின் போது, மாசி மக பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவில்களிலும், பெருமாள் கோவில்களிலும் வெகு விமரிசையாக மாசி மக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய கோவில்களில் மாசி மக திருவிழாவுக்காக கடந்த, 16ம் தேதி கொடியேற்றப்பட்டு, 10 நாள் பிரமோற்சவ விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 23, 24ம் தேதி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலின், ஐந்து தேர்களின் தேரோட்டமும், நேற்று முன்தினம் மாலை, அபிமுகேஸ்வரர் கோவில் தேரோட்டமும் மகா மக குளக்கரையில் நடந்தன.மாசி மக திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீர்த்தவாரி, நேற்று மகா மக குளத்தில் நடந்தது.இதற்காக நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மகா மக குளத்தின் கரைகளில், தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடினர். பின்னர் மகா மக குளத்தின் நான்கு கரைகளில் உள்ள, 16 சோடச லிங்கங்களையும் வழிபட்டனர். தீர்த்தவாரி நேரத்தில், மகா மக குளக்கரையில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.