காரைக்கால்: காரைக்காலில் மண்டபத்தூர் மற்றும் திருப்பட்டினத்தில் நடந்த தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் மண்டபத்தூரில் மாசி மகத்தையொட்டி நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. இதில் மண்டபத்தூர், வரிச்சிகுடி, திருவேட்டக்குடி பகுதிகளைச் சேர்ந்த 11 கிராம கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய சாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. பின், கடலில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி சாமிகளை வழிப்பட்டனர். திருப்பட்டினம். திருப்பட்டினம் பட்டினச்சேரியில் மாசிமக தீர்த்தவாரியொட்டி கடற்கரையில் எழுந்தருளிய கோவில் பத்து கோதண்டராமர், நித்யகல்யாண பெருமாள், நிரவி கரியமாணிக்க பெருமாள், திருமருகல் வரதராஜபெருமாள், திருப்பட்டினம் விழிவரதராஜபெருமாள், திருப்பட்டினம் ரகுநாதபெருமாள், திருப்பட்டினம் பிரசன்னவெங்கடேச பெருமாள், திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்து இரவு சாமி வீதி உலா நடந்தது.