பதிவு செய்த நாள்
26
பிப்
2013
11:02
கும்பகோணம்: வைணவத்திருத்தலங்களில் சிறப்பு மிக்கதாக கும்பகோணம் சக்கரபாணி ஸ்வாமி கோவில் திகழ்கிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய, மூன்று மூர்த்திகளின் சொரூபமாக, இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளாக சக்கரபாணி ஸ்வாமி திகழ்கிறார். இத்தலத்து சுதர்சனமூர்த்தியிடம் சூரியபகவான் சரணாகதி அடைந்ததால், இத்தலம் பாஸ்கரஷேத்திரம் என்றும், சூரிய பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதலம் என்றும், சகல தோஷ நிவர்த்தி தலமாகவும், பரிகார, பிரார்த்தனை தலமாகவும் போற்றப்படுகிறது. சிறப்புமிக்க இக்கோவிலில் கொடியேற்றத்துடன் மாசிமகப்பெருவிழா துவங்கி, விழா நாட்களில் பல்வேறு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாசிமகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சக்கரபாணிஸ்வாமி தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அதையடுத்து நேற்று காலை, 7 மணிக்கு பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்பட்டு, நான்கு வீதிகளிலும் தேரை வடம்பிடித்து இழுத்து, நிலையை வந்தடைந்தனர். தொடர்ந்து ஸ்வாமி காவிரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.