பதிவு செய்த நாள்
26
பிப்
2013
11:02
இடைக்கழிநாடு : மாசி மகத்தை ஒட்டி, கடப்பாக்கம் கடலில் தீர்த்தவாரி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, புனிதநீராடினர்.இடைக்கழிநாடு பகுதியில் உள்ள, கோவில்களிலிருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு, ஆண்டுதோறும் மாசி மகம் அன்று, கடப்பாக்கம் கடலில் தீர்த்தவாரி நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு தீர்த்தவாரிஉற்சவம், நேற்று நடந்தது.கடப்பாக்கத்தில் உள்ள வேணுகோபால சுவாமி, திரௌபதி சமேத அர்ச்சுன சுவாமி, ஸ்ரீ அபிதகுசாம்பிகை அருணாச்சல சுவாமி, பராசக்தி அம்பிகை, கப்பிவாக்கம், வேம்பனூர், கோட்டைக்காடு, பூந்தோட்டம், கோவைப்பாக்கம், நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும், நேற்று காலை, 7:00 மணிக்கு, அபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு தீர்த்தவாரிக்காக, கடலுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், பின், கடலில் தீர்த்தவாரியும் நடந்தது. இதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கோவில்களில் மாலை, 5:30 மணிக்கு, மகா அபிஷேகமும், இரவு, 8:00 மணிக்கு, வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனையும் நடந்தது.