பதிவு செய்த நாள்
26
பிப்
2013
11:02
திருநெல்வேலி: நெல்லை தினமலர் சார்பில் மாசிமகத்தை முன்னிட்டு நேற்று நெல்லையப்பர் கோயில் பொற்றாமரைக்குளத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் தெப்போற்சவம் கோலாகலமாக நடந்தது. பண்டைய காலத்தில் சைவ மதத்திற்கும், சமண மதத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சமண மதத்தினர், சைவ சமயத்தை சேர்ந்த அப்பர் பெருமானை கல்லில் கட்டி கடலில் போட்டனர். அப்போது அப்பர் பெருமான் சிவபெருமானை நினைத்து பாடியதால், கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. மேற்படி தெப்பத்தில் அப்பர் பெருமான் தனது பக்தியின் மூலம் சிவனுடைய அருளின் சிறப்பை உலகிற்கு விளக்கும் வகையில் இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்குகிறது. மேற்கண்ட வைபவமானது நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று நடக்கிறது. இந்த ஆண்டு மாசிமகத்தை முன்னிட்டு நெல்லை தினமலர் சார்பில் நேற்று இரவு நெல்லையப்பர் கோயில் அம்மையப்பர் மண்டபத்திலிருந்து எழுந்தருளிய அப்பர் பெருமானுக்கு பெற்றாமரை விநாயகர் சன்னதி அருகில் விஷ பாயாசம் கொடுக்கும் வைபவம் நடந்தது. அங்கிருந்து அம்மையப்பர் மண்படத்திற்கு சென்ற போது, அப்பரை யானை மிதிக்கும் வைபவம் நடந்தது. இந்த வைபத்தின் போது யானை அப்பரை மிதிக்காமல் வலம் வந்து வணங்கி நின்றது. இதனையடுத்து அப்பருடன் கல்லை கட்டி தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பொற்றாமரை குளத்தை ஏழுமுறை அப்பர் பெருமாள் வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தில் வெற்றிலையில் சூடன் ஏற்றி அப்பரை வழிபட்டனர். அப்போது சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் சுவாமி, அம்பாள், அப்பர் பெருமான் ஆகியோருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், நெல்லை மண்டல சேர்மன் மோகன், கவுன்சிலர் சங்கர், ஓய்வு பெற்ற அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலர் கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
அம்பாள் தங்க பாவாடையில் அருள்பாலிப்பு: பவுர்ணமியை முன்னிட்டு நெல்லை கண்ணன், அ.தி.மு.க., மகளிர் அணி புவனேஸ்வரி ஆகியோர் சார்பில் அம்பாளுக்கு தங்கபாவாடை சாற்றும் வைபவம் நடந்தது. இதில் நெல்லை மகிளா கோர்ட் அரசு வக்கீல் மேகலா கென்னடி, அ.தி.மு.க., புவனேஸ்வரி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 விளக்கு பூஜை: பவுர்ணமியை முன்னிட்டு அம்பாள் சன்னதி முன் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.