பதிவு செய்த நாள்
27
பிப்
2013
10:02
வேலூர்: மோட்சம் அடைய சுலபமாக வழி துறவறம் தான், என, துறவறம் ஏற்கும் மாணவி கூறினார்.வேலூர், பேரி சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தெருவில் உள்ள, ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த சாந்தி லால். ஜவுளி கடை வைத்துள்ளார். இவர் மனைவி நிர்மலா பாய். இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் ரேஷ்மா, 23, பி.காம்., படித்து உள்ளார்.இவர் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தார். கடந்த, 24ம் தேதி வேலூர் ஜெயின் கோவிலில் இருந்து காந்தி ரோடுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.துறவறம் ஏற்கும் விழா வேலூரில் நடந்து வருகிறது.
துறவறம் மேற்கொள்வது குறித்து ரேஷ்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: துறவறம் ஏற்பது சுலபமல்ல. இதற்காக மூன்று ஆண்டுக்கு முன் எனக்கு அனுமதி கிடைத்தது. அதன் பின் பல பெண் துறவிகளிடம் பயிற்சி எடுத்தேன். சில பேர் வாழ்க்கையில் செய்யும் புண்ணியம், பாவத்தின் படிதான் இன்பமும், துன்பத்தையும் அனுபவிக்கின்றனர். நாம் முடிந்தவரையில் மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ வேண்டும்.மற்ற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடாது. துறவறம் தான் வாழ்க்கையின் முடிவு. மோட்சம் அடைய சுலபமாக வழி துறவறம் தான். சின்ன, சின்ன பூச்சிகளும் வாழத்தான் விரும்புகின்றன. அதை நாம் கொல்லக்கூடாது.
நான் டாக்டராக, இன்ஜினியராக விரும்பவில்லை. கடவுளுக்கு சேவை செய்யவே விரும்புகின்றேன். வாழ்க்கை நம் கையில் இல்லை. தெய்வத்தால், முன்னதாகவே நிர்ணயிக்கப்படுகிறது.வேலூர் ஜெயின் கோவிலில், மார்ச், 2ம் தேதி துறவறம் ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆச்சார்யா ஸ்ரீ ,1,008 ஸ்ரீ ஜினாந்தம் சுரிஷ்வர்யின் முன்னிலையில் துறவறம் ஏற்றுக் கொள்கின்றேன். நான் துறவறம் ஏற்பதில் என் குடும்பத்தாருக்கு வருத்தம் கிடையாது. சந்தோஷமாக என்னை துறவறம் ஏற்கச் செய்துள்ளனர்.இவ்வாறு கூறினார்.