பதிவு செய்த நாள்
27
பிப்
2013
10:02
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் குண்டம் விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்கு பின் சிறப்பு பூஜைகள், 23ம் தேதி நள்ளிரவு மயானப் பூஜை, 24ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், மகா பூஜை நடத்தப்பட்டன. நேற்றுமுன்தினம், சித்திரைத் தேரில், மாசாணியம்மன் அருள்பாலித்தார். ஆனைமலை நகரப்பகுதியில், தேர் உலா வந்து, குண்டம் அருகில் நிறுத்தப்பட்டது.தலைமை முறைதாரர் மனோகரன், குப்புசாமி, அருண் ஆகியோர், அம்மனின் சூலத்துடன் கோவிலை வலம் வந்த பின், நேற்று காலை 8:00 மணியளவில், குண்டம் விழா துவங்கியது. 3,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சி முடிந்த பின், அம்மனின் சித்திரைத் தேர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.துணை சபாநாயகர் ஜெயராமன், எம்.பி., சுகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், முத்துகருப்பண்ணசாமி, வேலுமணி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், கோவில் தக்கார் குமரதுரை, கோவில் உதவி ஆணையர் அனிதா உட்பட பலர் பங்கேற்றனர். கோவை ரூரல் எஸ்.பி., உமா, ஈரோடு எஸ்.பி., பொன்னி தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.