பதிவு செய்த நாள்
01
மார்
2013
10:03
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சங்கிலி மாடசாமி கோயில் கருவறை சிவலிங்கம் மீது,ஆண்டுக்கு மூன்று நாள் சூரிய ஒளி விழுகிறது. வத்திராயிருப்பு சேனியர் குடி தெரு பகுதியில் சங்கிலிமாடசாமி கோயில் உள்ளது. மூலவராக சொக்கநாதர், மீனாட்சியம்மன் உள்ளனர். கோயில் வாசல் வழியே வழக்கமாக வந்து செல்லும் சூரிய ஒளி, முன் மண்டபத்தோடு நின்று விடும். ஆண்டிற்கு மூன்று நாட்கள் அதாவது ,பிப்., 26,27,28 தேதிகளில், வாசலுக்கு மேல் 20 அடி உயரத்தில் உள்ள கோபுர ஆர்ச் சிற்பங்களுக்கு நடுவே தோன்றுகிறது. அங்குவிழும் சூரிய ஒளி, 40 அடி தூரம் சென்று, கர்ப்ப கிரகத்தில் உள்ள சொக்கநாதர் சுவாமி மீது ,மூன்று நிமிடம் விழுகிறது. அதன் பின் வந்த வழியே கிழே இறங்கி, 10 நிமிடத்தில் முன் மண்டபத்திற்கு சென்று மறைகிறது. இந்த ஆண்டு அதிசயத்தை,கடந்த மூன்று நாட்களாக அப்பகுதி பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கோயில் பூசாரி சாமிமலை ,""ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மாதம் இதே தேதியில், சுவாமி மீது வந்து விழும் சூரிய ஒளி, ஒருநாள் கூட முந்துவதோ, பிந்துவதோ இல்லை. தமிழ் தேதி, நட்சத்திரம் பொருந்தி வருவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நட்சத்திரத்தில் வருகிறது. ஆனால் தேதி அடிப்படையில் சரியாக விழுகிறது, என்றார்.