பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
நாகர்கோவில்: பெண்களின் சபரிமலை என, அழைக்கப்படும், நாகர்கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசிக்கொடை விழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. சபரிமலைக்கு ஆண்கள் இருமுடி கட்டுடன் செல்வது போல, பெண்கள், இருமுடி கட்டுடன், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வழிபடுவர். இருமுடி கட்டுடன் வரும் பெண்கள், கடலில் குளித்து, தேவியை வணங்கி விட்டு, பொங்கலிட்டு, வேண்டுதலை நிறைவு செய்வர்.பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மாசி மாதத்தில், 10 நாட்கள் கொடை விழா நடக்கும். மாசி கடைசி செவ்வாய் கிழமைக்கு, 10 நாட்களுக்கு முன், விழா தொடங்கும். இந்த ஆண்டு விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்மாவட்டங்களில் இருந்து, 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பதாம் நாள் விழாவில், சக்கர தீவெட்டி ஊர்வலமும், 10ம் நாளில், பிரசித்தி பெற்ற ஒடுக்கு பூஜையும் நடக்கும். மார்ச் 12ல், குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.