பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
திருச்சி: கோவில்களில் வியாபார ரீதியில் மேற்கொள்ளப்படும் செயல்களை, தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, திருச்சியில் நடந்த ஹிந்து மறுமலர்ச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.,) மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், ஹிந்து மறுமலர்ச்சி மாநாடு நேற்று முன் தினம் திருச்சியில் துவங்கியது.அகில உலக வி.ஹெச்.பி., ஆலோசகர் வேதாந்தத்தின் சதாபிஷேக வைபவத்தை முன்னிட்டு நடக்கும் இந்த மாநாட்டின், முதல் நாள் துறவியர் மாநாடு நடந்தது. இரண்டாவது நாளான நேற்று, கிராம கோவில் பூஜாரிகள் மாநாடு நடந்தது. ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி, மாநாட்டிற்கு தலைமை வகித்து பேசுகையில்:இந்தியா உட்பட அனைத்து பகுதிகளில் வாழும் முஸ்லிம்களிடம் இருப்பது போல, ஹிந்துக்களிடம் தெளிவான மனப்பான்மை கிடையாது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக, இந்தியாவிடம் இருந்து இலங்கையை பிரிக்க சதி நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை அமைத்த, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலம், கிராம கோவில்களுக்கு திருப்பணி செய்ய வேண்டும். கோவில்களுக்கான மின் இணைப்பை வீட்டு உபயோக கட்டணத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூல் செய்வது, திருவிழா வரி, கோவில் விழாவுக்கு, சிறப்பு பஸ்களை இயக்கி, கூடுதல் கட்டணம் வசூல் செய்வது போன்ற வியாபார உத்திகளை, தமிழக அரசு கைவிட வேண்டும். ஹிந்து மாணவர்களுக்கும், கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், "தேசத்தை நிர்மாணித்த ஓர் ஹிந்து என்ற புத்தகத்தை, சுப்ரமணிய சாமி வெளியிட, அதை கிருஷ்ணமாச்சாரி பெற்றுக் கொண்டார்.வி.ஹெச்.பி., அகில உலக ஆலோசகர் வேதாந்தம் பேசினார்.