பதிவு செய்த நாள்
04
மார்
2013
10:03
திருப்பதி - திருமலை வெங்கடாஜலபதி கோவிலின், வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட், 2, 248 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டை விட, இத, 238 கோடி அதிகம். எவ்வித கட்டணங்களும் உயர்த்தப்படவில்லை. திருப்பதி - திருமலை தேவஸ்தான போர்டு கூட்டம், தலைவர், பாப்பி ராஜு தலைமையில் நேற்று கூடியது. அதில், திருப்பதி கோவிலின், 2, 248 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டை விட, 238 கோடி ரூபாய் அதிகம். எவ்வித கட்டணங்களும் உயர்த்தப்படவில்லை. ஒப்புதலுக்காக, பட்ஜெட், ஆந்திர மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாவன:உண்டியல், நன்கொடை மூலம் வருவாய், 859 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டி, 555 கோடி ரூபாயாக இருக்கும்.தரிசன டிக்கெட்டுகள் விற்பனை மூலம், 231 கோடி ரூபாயும், பக்தர்களின் முடி காணிக்கை மூலம், 200 கோடி ரூபாயும் கிடைக்கும். லட்டு பிரசாதம் விற்பனை மூலம், 150 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேவஸ்தான செலவுகள் வகையில், முதலீடுகளுக்கு, 638 கோடி ரூபாயும், சம்பளத்திற்கு, 335 கோடி ரூபாயும், இன்ஜினியரிங் வேலைகளுக்காக, 190 கோடி ரூபாயும், இந்து தர்ம பிரசார செலவுக்காக, 95 கோடி ரூபாயும், கல்வி நிறுவனங்களுக்கு, 81 கோடி ரூபாயும், தேவஸ்தானம் செயல்படுத்தும் மருதுவமனைகளுக்கு, 46 கோடி ரூபாயும் செலவிடப்படும்.இவ்வாறு, பட்ஜெட்டில் சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பட்ஜெட்டுக்கு பின், நிருபர்களை சந்தித்த, தேவஸ்தான செயல் அதிகாரி, எல்.வி.சுப்ரமணியம் கூறியதாவது:பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கோவிலின் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். ஊழியர்கள் நலம், உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்; எவ்வித கட்டணங்களும் உயர்த்தப்படவில்லை.அரியானாவின் குருஷேத்ராவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது. கன்னியாகுமரியிலும், மும்பையில், கோவில்கள் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது ஐதராபாத் நிருபர் -
ரூ.65 லட்சம் நன்கொடை: சென்னையை சேர்ந்த பக்தர்கள், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, 65 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.சென்னை அஞ்சனா சாப்ட்வேர் நிறுவன இயக்குனர் வெங்கடேஷ் ராஜேந்திரன், திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நன்கொடையாக, 55 லட்சம் ரூபாய் வழங்கினார். இதற்கான வரைவோலையை திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் வழங்கினார். சென்னையை சேர்ந்த சுதிர் ரெட்டி என்ற பக்தர், 10 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை நன்கொடையாக வழங்கினார்.பாலிவுட் திரைப்பட நடிகை வித்யாபாலன், தனது கணவருடன், நேற்று முன்தினம் திருமலையில் சாமி தரிசனம் செய்தார். ""திருமணத்திற்கு பின் முதன்முறையாக திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்தது, சந்தோஷமாக உள்ளது, என்றார்.