பதிவு செய்த நாள்
05
மார்
2013
11:03
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை, அங்காளபரமேஸ்வரியம்மன் கோவிலில், மயானக்கொள்ளை விழா வரும், 7ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரையில் நடக்கிறது. இதையொட்டி, வரும், 7ம் தேதி காலை, 9 மணிக்கு மஹா கணபதி, சுப்பிரமணியர், அம்பாள்ஹோமங்களும், மாலை, 5 மணிக்கு சக்தி கரகம் அழைப்பும், மாலை, 6 மணிக்கு கொடியேற்றமும், இரவு, 7.30 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் வெள்ளி கவசத்தில் திரு வீதி உலா நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, 5 மணிக்கு சக்தி கரக ஊர்வலமும், காலை, 7.30 மணிக்கு பூ மிதி விழாவும், மாலை, 6 மணிக்கு ரிஷப வாகனத்தில் அங்காள பரமேஸ்வரியம்மன் வீதி உலாவும், 9ம் தேதி மாலை, 3.30 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடும், இரவு, 7 மணிக்கு கங்கையில் நீராடி அபிஷேக ஆராதனையும், சிம்ம வாகனத்தில், தாண்டேஸ்வரரும், அங்காளபரமேஸ்வரியும் திருவீதி உலா வருதலும் நடக்கிறது. வரும், 10ம் தேதி காலை, 9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வருதாலும், தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜையும், இரவு, 9 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு, 11 மணிக்கு காமதேனு வாகனத்தில், ஸ்ரீதாண்டவேஸ்வரரும், அங்காளபரமேஸ்வரியும், சிவன், பார்வதி அவதாரத்தில் திரு வீதி உலாவும், இரவு, 1 மணிக்கு முகவெட்டு ஊர்வலமும் நடக்கிறது. வரும், 11ம் தேதி காலை, 9.15 மணிக்கு, பக்தர்கள் அலகு போடும் நிகழ்ச்சியும், காலை, 10 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் அலங்காரத்துடன் பூதவாகனத்தில் மாயனம் செல்லும் மயான கொள்ளைப் பெருவிழா நடக்கிறது. மாலை, 6 மணிக்கு மேல் அங்காள பரமேஸ்வரியம்மன் சிறப்பு மின் விளக்கு அலங்காரத்தில் வீதி உலா வருதலும், அதிகாலை, 1 மணிக்கு அம்மனுக்கு பன்னீர் அபிஷேகமும் நடக்கிறது.
வரும், 12ம் தேதி மாலை, 6 மணிக்கு பல்லக்கு உற்சவத்தில், குதிரை வாகனத்தில், அங்காளபரமேஸ்வரியம்மன் திரிபுர சுந்தரி அம்மன் அவதாரத்தில் திருவீதி உலாவும், 13ம் தேதி மாலை, 4 மணிக்கு பிள்ளைப்பாபு ஊர்வலமும், இரவு, 7.30 மணிக்கு கும்பபூஜையும், கொடியிறக்கமும் நடக்கிறது. இதையொட்டி, ஒவ்வொரு நாளும், அம்மன் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். வரும், 9ம் தேதி இரவு, 7 மணிக்கு ஏ.எஸ்.டி.சி., குடியிருப்பு வளாகத்தில் கங்கை பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. வரும், 7ம் தேதி கடகத்தூர் முனிதேவுடு குழுவினரின் நாதஸ்வரமும், 7ம் தேதி முதல் 12ம் தேதி வரையில், பம்பை வித்வான்கள் சசிகுமார், முத்துராஜ், கோவிந்தராஜ், சிவலிங்கம் ஆகியோரின் பம்பையும், வரும், 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் வேலூர் மாவட்டம் குருசிலாப்பட்டு ஜெகன்நாதன் குழுவினரின் தாரை, தப்பட்டையும் நடக்கிறது. வரும், 11ம் தேதி காலை, 8 மணிக்கு சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டி, செல்வம் குழுவினரின் அலகு போடும் நிகழ்ச்சியும், மாலை, 5 மணிக்கு கர்நாடகா புகழ் பார்த்தசாரதி குழுவினரின் டோலோமேளம், பூஜாகுனிதா, வீரகாசிகுனிதா நடனம், ப்லதங்கமடி கும்பே குனிதா நடனமும், மைசூர் பன்னாரி குழுவினரின் நகாரி மேளமும், கேரளா திருச்சூர் சுரேஷ் குழுவினரின் புலிக்கலி ஆட்டமும் நடக்கிறது. வரும், 14ம் தேதி இரவு, இன்னிசை பாட்டு பட்டிமன்றம், "திரைஇசைப்பாடல்கள் மக்கள் மனதுக்கு முள் கிரீடமா? மணிமகுடமா? என்ற தலைப்பில், விழுப்புரம் செல்வராஜ் நடவராக கொண்ட பட்டிமன்றமும், 16ம் தேதி கோவை ராஜ் மெலோடியஸ் ஆர்க்கெஸ்ட்ரா, மிமிக்கிரி செந்தில் குழுவினர் மற்றும் தர்ஷினி, பிரபு, சலீம், ரோபோகுலாம் ஆகியோர் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மற்றும் ஊர் செட்டியார் கமலேசன், சங்கோதி செட்டியார் முனுசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.