மாரியம்மன் கோவில் மாசிவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2013 11:03
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா, திருக்கொடியேற்றுடன் துவங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு நேற்றுமுன்தினம் இரவு திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. முன்னதாக திருவப்பூர் மற்றும் கவிநாடு ஊரார்கள் சார்பில், புரவி எடுத்து ஊர்வலமாக வந்து காவல் தெய்வமான களரி பெரிய அய்யனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் வெள்ளி அன்னவாகனத்தில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலுக்கு எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் அம்மன் திருக்கோவில் வந்தடைந்ததும் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 11ம் தேதி மாலை, 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. சர்வ அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேர் திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச், 18ம் தேதி வரை, விழா தொடர்ந்து, 16 நாட்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர், மண்டகபடிதாரர்கள் செய்துள்ளனர்.