பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன. சிவன் கோவில்களில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி உற்சவம், வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். வழக்கம்போல், இந்த ஆண்டு மகா சிவராத்திரி உற்சவம், வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், மகாசிவராத்திரி உழவாரப் பணிக் குழு, மகா அபிஷேகம் மற்றும் திருவிளக்கீடு பணிக்குழு சார்பில், 10ம் தேதி காலை, 9:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, அபிஷேகம் நடைபெறும். கோவிலில் உள்ள 412 சுவாமிகளுக்கும், எண்ணெய் காப்பு, பால், தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், பழம், அபிஷேகம் நடைபெறும். அதேபோல் காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், நான்கு கால பூஜை நடைபெறும். அதேபோல், கைலாசநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், வழக்கறுத்தீஸ்வரர் கோவில், முத்தீஸ்வரர் கோவில், சித்தீஸ்வரர் கோவில், செவிலிமேடு கைலாசநாதர் கோவில் என, அனைத்து கோவில்களிலும், நான்கு கால பூஜை நடைபெறும்.
திம்மசமுத்திரம்: இங்குள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோவிலில், 10ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, மகா கணபதி, சிவபெருமாள், அம்பாள் பூஜை, 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு, 7:30 மணிக்கு ஆன்மிக குருமார்களின் அருளுரை நடைபெறும். இரவு, 9:00 மணிக்கு பரத நாட்டியம், 10:00 மணிக்கு நகைச்சுவை நாடகம், 11:00 மணிக்கு, சிவகவியரங்கம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, வாண வேடிக்கை, இரவு, 12:30 மணியிலிருந்து அதிகாலை, 3:00 மணி வரை முழு நீள பக்தி நடனம், அதிகாலை, 4:00 மணிக்கு, ஆன்மிக பட்டிமன்றம், 5:00 மணிக்கு சிவ பாடல்கள், 6:00 மணிக்கு சிவபெருமாள் பூஜை நிகழ்ச்சி நிறைவு விழா நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு: சாஸ்திரம்பாக்கம் தையல்நாயகி உடனுறை வட வைத்தீஸ்வரர் கோவிலில், 10ம் தேதி காலை, 6:00 மணிக்கு கோ பூஜை, 7:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாலை, 5:30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு, 8:00 மணிக்கு அன்னதானம், 9:00 மணிக்கு ராணுவ அதிகாரி பயிற்சிப் பள்ளி தெய்வீக இன்னிசை கச்சேரி, அதைத் தொடர்ந்து நான்கு கால பூஜை நடைபெறும்.
திருப்போரூர்: திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில், மாலை, 6:00 மணியிலிருந்து, மறுநாள் காலை, 6:00 மணி வரை, நான்கு கால பூஜை நடைபெறும். இரவு, 9:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, அதைத் தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது.