பதிவு செய்த நாள்
09
மார்
2013
11:03
தேனி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவிற்கு, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா, (மார்ச் 10ம் தேதி) தொடங்கி 14ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் 24 மணி நேரமும், பல லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்காக போக்குவரத்துக்கழகம் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்நிலையில், இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் எஸ்.பி., பிரவீன்குமார் அபினபு தலைமையில் நடந்தது. கூடுதல் எஸ்.பி., செல்வராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.பி., தலைமையில், கூடுதல் எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி.,க்கள் 10 இன்ஸ்பெக்டர்கள், 35 எஸ்.ஐ.,க்கள் 500 போலீசார் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவினர், 24 மணி நேரமும் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், என போலீசார் தெரிவித்தனர்.