பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், பக்தர்களின் சரண கோஷமும், பெண்களின் மங்கல குலவையும் விண்ணதிர, அம்பாள் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அரும்பாலித்தார். கோலாகலமாக நடந்த தேர்த்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். புதுக்கோட்டை அடுத்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கடந்த, 3ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், கரகம், அக்னி சட்டி ஏந்திவந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுபோன்று அலகுகள் குத்தியும், வேல் காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி என விதவிதமான காவடிகள் எடுத்து வந்தும், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் மாலை, 4 மணிக்கு தேர் திருவிழாவுக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடந்தது. இதையடுத்து பக்தர்களின் "அம்மா தாயே முத்துமாரி என்ற சரண கோஷமும், பெண்களின் மங்கல குலவையும், வாண வேடிக்கையும் விண்ணதிர மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில், சர்வ அலங்காரத்துடன் முத்துமாரியம்மன் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண, கோவிலை சுற்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அம்மன் சன்னதி முன்பிருந்து, 4.30 மணிக்கு புறப்பட்ட திருத்தேர், கோவிலை சுற்றியுள்ள திருவீதிகளை ஆடி, அசைந்தவாறு வலம் வந்த பின், 5.50 மணிக்கு நிலைக்கு வந்தது. இதையடுத்து கோவிலுக்கு திரும்பிய அம்மனுக்கு மீண்டும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. தேர்திருவிழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை நகர் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.