நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், தெப்ப உற்சவ விழா, வரும், 23ம் தேதி முதல், ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. தெப்ப உற்சவ விழாவின் ஐந்து நாட்களிலும், மலையப்ப சுவாமி பல அவதாரங்களில் மாலை நேரத்தில் தெப்ப திருக்குளத்தில் உற்சவராக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தருகிறார். துவக்க நாள் அன்று மலையப்ப சுவாமி சீதா லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேதரராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். இரண்டாம் நாள் ருக்குமணி சமேதராக கிருஷ்ணா அவதாரத்தில் திருமலை மாடவீதியில் உற்சவராக வலம் வந்த பின்னர் தெப்ப குளத்தில் மூன்று முறை வலம் வருகிறார். மூன்றாம் நாள் மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக பிரபை அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்த பின் தெப்பத்தில் பவனி வருகிறார். நான்காம் நாள் அன்று ஐந்து சுற்றுக்கள் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மாதம், 27ம் தேதி தெப்ப உற்சவ விழா நிறைவை ஒட்டி மலையப்பசுவாமி ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக ஏழு சுற்றுகள் திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு திருமலை கோவிலில் முதல் மூன்று நாட்கள் வசந்த உற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.