பதிவு செய்த நாள்
13
மார்
2013
10:03
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெறாததால், வரும் ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான, வாய்ப்பு இல்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க, திருவாரூர் தியாகராஜர் கோவில் கும்பாபிஷேகம், 2001 ஏப்., 9ம் தேதி நடந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கும்பாபிஷேகம் நடத்த, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலைத் துறை, உபயதாரர்கள் நன்கொடைஎன, 10 கோடி ரூபாய்க்கு மேல், திட்ட மதிப்பீடு செய்து, பணிகள் துவங்கினர். கோவில் வளாக மதில் சுவர் பணிகள் முடிந்த பின், பெரிய மதில் சுவர்கள், மூன்று ராஜகோபுரங்கள், ஆறு சிறிய கோபுரங்கள் என, கோவிலில் அனைத்துப் பகுதிகளிலும் திருப்பணிகள் துவங்கின. ஆனால், எந்த பணியும், இது வரை, முழுமை பெறாமல் உள்ளன. ராஜகோபுரத்திற்கு அமைக்கப்பட்ட சாரங்கள், தற்போது, மக்கி, கீழே விழுகின்றன. கோபுரங்களில் முளைத்துள்ள செடிகளும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. கிழக்கு நுழைவு வாயில், வலது பக்கம் உள்ள, ஆரூரான் கல்யாண மண்டபம், 44 லட்சம் ரூபாய் செலவில், அறநிலைத் துறை மூலம், சரி செய்ய நிதி ஒதுக்கியும், பணிகள் துவங்க இல்லை. இதனால் ஆண்டுக்கு, பல லட்சம் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆழித்தேர் வடிவமைப்பிற்கு, அதிகாரிகள் இன்னும் மரம் தேடி வருகின்றனர். எந்த பணியும் நிறைவு பெறாததால், பணிகள் முடிய, மேலும் ஓராண்டு ஆகும் எனத் தெரிகிறது. இதானல், கும்பாபிஷேகமும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.