பதிவு செய்த நாள்
20
மார்
2013
11:03
மணப்பாறை: மணப்பாறை அருகே வீரப்பூரில் சரித்திர புகழ்வாய்ந்த ஸ்ரீபெரியக்காண்டியம்மன், பொன்னர் சங்கர், தங்காள், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பு ஸ்வாமி கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் இக்கோயில்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழா 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்கும் விழாவில் முக்கிய விழாவான வேடபரி குதிரைத்தேர் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை, ஆறு மணிக்கு நடந்தது. இதில் சாம்புவன் காளை மாட்டின் மீது அமர்ந்து முன் செல்ல பின்னே பொன்னர் கையில் அம்பு ஏந்தி குதிரை வாகனத்திலும், பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்திலும் தங்காள் தீர்த்தக்குடம் சுமந்து சென்று அணியாப்பூரில் பொன்னர் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. வேடபரி செல்லும் வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஸ்வாமிகளின் மீது மலர் மாலைகளை வீசி அம்மனின் அருள்பெற்றுச் சென்றனர். நேற்று காலை 10.30 மணிக்கு நடந்த திருத்தேர் வடம்பிடித்தல் எனும் தேரோட்ட விழாவில் ஸ்ரீபெரியக்காண்டியம்மன் திருத்தேரில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி பவனிவரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், மணப்பாறை தாசில்தார் குளத்தூர்பாண்டியன், டி.எஸ்.பி., மீனா, ஜமீன்தார்கள் பொன்னழகேசன், சவுந்திரபாண்டியன், கிருஷ்ணவிஜயன், மகேஷ், வையம்பட்டி யூனியன் துணை சேர்மன் முத்துசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் ராஜேஸ்வரி, சாவித்திரி, வேலுச்சாமி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.