பதிவு செய்த நாள்
21
மார்
2013
10:03
கும்பகோணம்: நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள்கோவிலில் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் பங்குனித்திருத்தேர்விழா துவங்கியது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள்கோவில் உள்ளது. வைஷ்ணவ திவ்ய தேசங்கள், 108ல் 20வது திவ்ய தேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள், 40ல் 14வது திருப்பதியாகவும், பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும், ஆழ்வாரால் 100 பாசுரங்கள் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட தலமாகவும் விளங்குகிறது. சிறப்பு பெற்ற இவ்வாலயத்தில் மூலவராக, உற்சவராக விளங்கும் கல்கருடபகவான் அருள்பாலிப்பது மேலும் சிறப்பு. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் கல்கருடசேவை உலகப்பிரசித்திபெற்றது. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனித்திருத்தேர் விழா நடப்பது வழக்கம். அதன்படி, இவ்வாண்டும் நேற்றுமுன்தினம் காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன்பாக எழுந்தருளினார். பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் மாரியப்பன், நிர்வாக அதிகாரி பொன்னழகு மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். இரவு பெருமாள் தாயார் சூரியபிரபையில் வீதியுலா நடந்தது. தினசரி காலை பல்லக்கிலும், மாலை யாழி, கிளி, சேஷவாகனம், அனுமார், கமல, யானை, குதிரை, தங்கதண்டிகை என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.
உலகப்பிரசித்திபெற்ற கல்கருடசேவை நாமை 22ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கிறது. மூலவராகவும், உற்சவராகவும் விளங்கும் கல்கருடன் சிறப்பு அலங்காரத்தில் முதலில் நான்குபேர், 8, 16, 32, 64 பேர் என படிப்படியாக உயர்ந்து கல்கருடபகவானை தூக்கி வருவது பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்திவருவது போல் கண்கொள்ளாகாட்சியாக அமைந்திருக்கும். வரும் 27ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பெருமாள் தாயார் தேரில் எழுந்தருளுகின்றனர். பின் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ராதாகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி பொன்னழகு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.