Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நற்றிணை (பகுதி-5) நற்றிணை (பகுதி-8)
முதல் பக்கம் » நற்றிணை
நற்றிணை (பகுதி-7)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
12:03

நற்றிணை - 301. குறிஞ்சி

நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,  5
பாவை அன்ன வனப்பினள் இவள் என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.  

அகிலின் நெய்பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள்தான் பருவம் உடையள் ஆயினமையால்; நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற்போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒருதன்மையொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒருதன்மையொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடையவள்; இவளென்று விருப்பம் வரும் உள்ளத்துடனே பலபடியாகப் புகழ்ந்து கூறி; எம் தாய் சிறிதும் மறக்கப்படாத மடந்தையாயிராநின்றாள் ஆதலின் இவளது ஆற்றாமை தீரக் கூட்டுவிப்பதை அறியின் அவ்வன்னை எத்தன்மையள் ஆவளோ? இதற்கு யான் அஞ்சுகின்றேன்;

சேட்படுத்து, பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான் என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது. - பாண்டியன் மாறன் வழுதி

நற்றிணை - 302. பாலை

இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும், நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ  5
தாஅம் தேரலர்கொல்லோ- சேய் நாட்டு,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே?  10

வேற்று நாட்டிலே களிறு காலால் உதைத்துப் போகட்டு ஒழிந்த மேல் கீழாகப் படிந்த மிக்க புழுதி; வெளிறு இன்றி வயிரமேறிய வேலமரங்கள் நெருங்கிய செல்லுவோருக்குத் துன்பஞ் செய்தலையுடைய முதிர்ந்த நெறியை மறையாநிற்கும்; மக்கள் நடத்தற்கரிய சுரநெறியின்கண்ணே சென்ற தலைவர்; பொன்னாலாகிய கலன்களை மிக அணிந்த மகளிர்போல யாவரும் விரும்பும் வண்ணம் மலர் விரிந்த நீண்ட சுரிந்த பூங்கொத்தில் உள்ள விளங்குகின்ற பூவையுடைய கொன்றைக்காடு அழகு மிக்கிருந்த அதனை அறிந்திலரேனும்; பெரிதும் வருகின்ற மழையை நோக்கி மலர்ந்த நீலமணியின் நிறம் போன்ற கரிய புதர்களிலுள்ள; நல்ல பூங்கொத்தை உடைத்தாகிய எறுழ் மலர் மழைக்காலம் நீங்குதலாலே தன்னிறமாறி வெண்மை நிறம் பொருந்தியிருத்தலை அவர் தாம் அறியாரோ? அறிந்திருப்பாரேல் முன்பு தாம் கூறிய பருவம் கழிகின்றதே என்று வந்திருப்பரே;

பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 303. நெய்தல்

ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,  5
துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம்வயின் வருந்தும், நன்னுதல் என்பது
உண்டுகொல்?- வாழி, தோழி!- தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி,  10
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.  

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக; ஊர் ஓசையவிந்து அடங்கி இரவு நடுயாம மாகலும்; கட்குடியின் செருக்கு அடங்கிப் பாக்கமும் துயிலா நின்றதே இப்பொழுது நம் காதலனை நினைந்து நாம் வருந்துதல் போல; தௌபிந்த கடலின்கண்ணே வலிய கையையுடைய பரதவ மாக்கள் மீன் பிடித்தற்கு நெடுக இட்ட சிவந்த நிறத்தையும் வலித்துக் கட்டிய முடியையும் உடைய அழகிய வலை; பீறுபடக் கிழித்துச் சென்று அச்சத்தைச் செய்யும் வலிமையுடைய தன் மருப்பினாற் கொல்ல வல்ல சுறாமீன் இயங்கா நிற்கும்; நீண்ட நீர்த்துறையுடைய தலைவனது உள்ளத்திலும்; பண்டு தொட்டு உறைகின்ற கடவுள் தங்கப்பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின்; வருத்தந்தரும் குரலைக் கேட்குந்தோறும்; நல்ல நுதலினையுடைய நம் காதலி கண் உறங்காது காமநோய் வருத்துதலானே; உடம்பு மெலிந்து நம்மீது வருத்தமடையாநிற்பள் என்பதும் உண்டாகுமோ? ஆராய்ந்து கூறாய்,

வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம். - மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

நற்றிணை - 304. குறிஞ்சி

வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின்,  5
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே.  10

கிளிகள் சாரல் பொருந்திய மலையிலுள்ள சுற்றத்தொடு சேர்ந்து; தாம் கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்து தின்று; காற்றினால் ஒலியெழுப்பும் கொம்பு வாச்சியம் போல ஒன்றனையொன்று அழையா நிற்கும் நெருங்கிய பக்க மலைகளையுடைய நல்ல மலைநாடன் வந்து; என்னைப் புணர்ந்த காலமெல்லாம் எனக்கு நிரம்பிய நல்ல அழகு உண்டாகாநிற்கும்; அவன் என்னைப் பிரிந்தாலோ; நீலமணியிடைப்பட்ட பொன்போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட; என் அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும்; ஆதலினால் தண்ணிய தாய் மணங்கமழும் நறிய மாலையணிந்த வலிமையுடைய நம் காதலன் மார்பானது; இசையறிவிலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போலப் பெரிதும் இன்பமும் துன்பமும் உடையதா யிராநின்றது;

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது. - மாறோக்கத்து நப்பசலையார்

நற்றிணை - 305. பாலை

வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
நோய் ஆகின்றே- மகளை!- நின் தோழி,  5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே.  10

மகளே! நின் தோழி விளையாடிய வரிந்து அணிந்த பந்தும் நீர்விடுவார் இன்மையாலே வாடிய அவளோம்பி வந்த வயலைக் கொடியும்; சிற்றில் கோலி விளையாடிய மயில் போன்ற இலையையும் கரிய பூங்கொத்தையும் உடைய நொச்சியும்; காவலையுடைய அகன்ற மாளிகையிடத்து எதிரே காணும்படி தோன்றாநிற்ப; அவளின்றித் தனியே கண்ட சோலையும் என்னை வருத்தாநிற்ப; அவற்றொடு, நின் தோழி ஆதித்த மண்டிலம் கொதிப்புச் சிறிது அடங்கிய மாலையின் முற்படு பொழுதில் இலையுதிர்ந்த அழகிய மரக்கிளையில் இருந்து வரி பொருந்திய முதுகினையுடைய புறாவினது அச்சங்கொள்ளத்தக்க தௌபிந்த கூவுதலானாகிய ஓசையைக் கேட்டு; வெப்பமிக்க பொழுதின்கண் வருந்திப் போர் செய்யப் புகுந்தாற்போன்ற கண்ணையுடையாளாய் நோக்கி; இலங்கிய இலைவடிவாகிய வெற்றி பொருந்திய வேற்படையை யேந்திய காதலனை மலை குறுக்கிட்ட அரிய நெறியிடத்தே துன்புறுத்துங்கொல்லோ? என்றே; எனக்கு வருத்தம் உண்டாகா நின்றது;

நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம். - கயமனார்

நற்றிணை - 306. குறிஞ்சி

தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ-
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல்  5
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ- தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்  10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?  

கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக! என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே!

புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம். - உரோடோகத்துக் கந்தரத்தனார்

நற்றிணை - 307. நெய்தல்

கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே- தோழி!- வார் மணற் சேர்ப்பன்:  5
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி- பானாள்,
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே.  10

தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய நெடிய தேரிலே கட்டிய மணியும் ஒலியாநிற்கும்; பெயர்ந்துபட நடக்கின்ற வீரரும் ஆரவாரிப்பர்; ஆதலின் நெடிய மணற்குன்றினையுடைய சேர்ப்பன்; மகளிர் சென்று கடனீராடுகின்ற அகன்ற இடத்திலே மிக்க அழகுடன் பொலிந்து விளங்குகின்ற துத்தி படர்ந்த நினது அல்குலின் நலனைப் பாராட்டுமாறு இப்பொழுதே வருகிற்பன்காண்!; அவ்வண்ணம் வரினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்துளன் ஆதலின், அவனும் இந் நடுயாமத்து மலர் விரிந்த சோலையில் நாம் புணர்கின்ற குறியிடத்து வந்து மெல்லிய பூங்ந் கொத்தினையுடைய நறிய சோலையின்கண்ணே நம்மை எதிர் காணாதவனாகி; படுகின்ற நீங்குதற்கரிய அல்லலாகிய துன்பத்தையும் நாம் சிறிது பார்ப்போம்; அதனால் நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியையுடைய புன்னையின் கரிய அடிமரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம்; நீ வருவாயாக!

குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - அம்மூவனார்

நற்றிணை - 308. பாலை

செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை-
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,  5
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்  10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.  

ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி; நாம் பொருள்வயிற் பிரிந்து செல்லுதலின் விரைவால் உண்டாகிய சொல்லை விரும்பிக் கேட்டு; குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணில் நீரை வடியவிடுதலும்; அதனை யாம் அறிந்து இஃதென்னென்று அவளைப் பலபடியாகப் பாராட்டி வினாவவும் அதற்கு விடை கூற நாணினளாகி வருபவள்; யாம் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றனை யென்று வினவாமலும் போகலை என்று தடாமலும் இருக்குந் தன்மையளாய்; மணங் கமழ்கின்ற நெருங்கிய குழல் முடியாகிய கொண்டை விளங்க நல்ல சித்திரத் தொழிலமைந்து இயக்கும் இயந்திர மற்றழிந்த பாவை ஒன்று எம்மீது விழுந்தாற்போலக் கலங்கி நெடும் பொழுது நினைந்து நின்று பின்பு எம்முடம்பின் மீது சாய்ந்து விழுந்தனள்; அவ்வண்ணம் விழுதலும் அதனை நோக்கிய ஈரிய மண்ணாற் செய்யப்பட்டு ஈரங்காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அஃது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழியுமன்றே அப்படிப் போல; பொருள்வயிற் பிரியக் கருதிய எமது நெஞ்சம் அவளுடன் ஒன்றுபட்டுக் கரைந்து வேறுபாடின்றி அடங்கிற்றுமன், ஆதலின் இனிப் பிரிவதுதான் எவ் வண்ணமாகும்?

நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்

நற்றிணை - 309. குறிஞ்சி

நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
யான் செய்தன்று இவள் துயர் என, அன்பின்
ஆழல்; வாழி!- தோழி!- வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்,  5
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.  

தோழீ! தளர்வடைந்த தோளையும் வாட்டமுற்ற இரேகையையும் மாந்தளிரின் தன்மை போன்ற அழகு இழந்த எனது நிறத்தையும் நோக்கி; என்னால் இவளுக்கு இத் துயர் செய்யப்பட்டது என்று கூறி; என்பாலுள்ள அன்பின் மிகுதியினால் நீ அழாதே கொள்!; நெடுங்காலம் வாழ்வாயாக!; வாழையின் கொழுவிய மடலகன்ற கட்டைக் குருத்தாகிய இலையிலே தாற்றினுள்ள இனிய நீர் கலந்து தங்கியிருக்கும் பெரிய மலை நாடனுடைய நட்பானது; நமக்குத் துன்பமாயிருக்கவும் அதனை அறிபவர் இல்லையே என்று கூறாநிற்பை; ஐயோ! அவருடைய நட்பை நான் மிக நன்றாகத் தௌபிந்திருக்கின்றேனாதலால் ஆற்றியிருப்பேன் காண்!

வரைவு நீட ஆற்றாள் எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. - கபிலர்

நற்றிணை - 310. மருதம்

விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே!  5
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே- வல்லை,
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல,  10
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?  

விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய களிற்றி யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ?

வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம். - பரணர்

நற்றிணை - 311. நெய்தல்

பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
அழியா மரபின் நம் மூதூர் நன்றே-  5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே- தோழி!- நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங் களிப் பிரசம் ஊத, அவர்  10
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.  

தோழீ! அழியாத மரபினையுடைய நம் பழைமையான ஊரானது; மழை பெய்தாலோ எங்கும் உலாவா நின்ற உழையாகிய மான் கூட்டங்கள் செறியத் தோன்றப் பெற்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை உடையதாயிராநின்றது; அங்ஙனம் மழைபெய்யாது வறந்து விட்டாலோ, பெரிய கழிநீரிடத்து முள்ளிச்செடியின் மலருதிர்ந்து பரந்து சேறெல்லாம் ஒருசேரக் காய்ந்து கரிய கழிச் சேற்றிட மெங்கும் வெள்ளையாகிய உப்பு விளையாநிற்கும் பெருமையுடைய தாயிராநின்றது; இவையேயுமன்றிக் கொழுத்த மீன்சுடுபுகை தெருக்களினுள்ளே கலந்து சிறிய மலரையுடைய ஞாழல் மரங்கள் மிக்க துறையும் இனியதாயிராநின்றது; இவ்வளவு வளம் வாய்ந்த நம்மூர்க்கண் உள்ள கடற்கரைச் சோலையொன்றுமோ ஊரார் எடுக்கும் ஒரு பழியை உடையதாயிராநின்றது; அதுதான் யாதோ வெனில்; கரிய கிளையையுடைய புன்னை மலரில் உள்ள தேனைப் பருகிக் களிப்பினையுடைய கரிய வண்டுகள் நன்னிமித்தமாக எதிர்வந்து ஒலியாநிற்ப; நங் காதலராகிய அவர் வருகின்ற நெடிய தேரின் செவிக்கு இனிய ஓசையைக் கேட்பதுதான் அரியதாயிராநின்றது; இவ்வருமையொன்று இல்லையாய்விடின் நம்மூருஞ் சோலையும் மேதக்கன வாதலொடு அவர்வந்து நம்மைக் கூடின் அதுவும் மிக்க நல்லதாக நமக்குத் தோன்றுங்காண்;

அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சனார்

நற்றிணை - 312. பாலை

நோகோ யானே, நோம் என் நெஞ்சே-
பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,
மாரி நின்ற, மையல் அற்சிரம்-  5
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்-
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்? எனவே.  

பொருளீட்டுமாறு யான் உடன்பட்டு நின்னொடு வந்திலேன் என்று நொந்து கொள்ளுகின்ற என் நெஞ்சமே!; மேலேறிப் படரும் தேமலையும் முற்றாத இளைய கொங்கையையும் உடையவளாகிய நங் காதலி அவளருகினின்றும் பிரியாது நாம் இருந்தேமாகவும் மயங்கினளாய்க் கோடைத்திங்களிலும் நடுங்குபவள்; குளிர்ந்த புதரினுள்ள இண்டின் அழகிய குழை முதுகைத் தடவிக் கொடுப்பத் தன் சிறகு குவிந்திருந்த வருத்த மிக்க வெளிய கொக்கைப் பார்வையாக்கி வேட்டுவன் அதன் காற்கட்டை அவிழ்த்துவிட நின்ற கார்காலத்திலும்; பகல் இரவு என அறியாவாறு மயங்கிக் கிடத்தலையுடைய கூதிர்க்காலத்திலும்; வாடைக்காற்றொடு கலந்து வீசும் பெரிய முன்பனிப் பருவத்திலும் பின்பனிப் பருவத்திலும்; தமியளாயிருந்து என்ன பாடு படுவளோ? என்று; யான் நோவா நின்றேன்; எனது நோயின் தன்மையறியாது நீ புலக்கின்றனை! ஈதொரு வியப்பிருந்தவாறு நன்று;

பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியார்

நற்றிணை - 313. குறிஞ்சி

கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு  5
யாங்கு ஆகுவம்கொல்?- தோழி!- காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும்- தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா,  10
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.  

தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக் கிளியோப்பும் தினைப்புனமெல்லாம்; மேல் இலை காய்ந்து மலையருவி ஒலித்தாற்போல ஒலித்தல் அமையாவாயிராநின்றன; அதனால் யாம் காந்தளின் கமழ்கின்ற குலைமலர்ந்த விருப்பமிகுஞ் சாரலின்கண்ணே கூதாளி படர்ந்து மலர்ந்த நறிய சோலை தனிமையாகும்படி; கைவிட்டு ஊரிடத்து மீண்டு செல்வேம் போல எனக்குத் தோன்றாநிற்கும்; இங்ஙனமாகையில் தடைமுழுதும் அழித்துக் கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில் நாட்காலையின் மலர்ந்த மிக்க புதிய பூ பொன்னைப் பணி செய்யும் பொற்கொல்லன் உடைய கைவினையைப் போல; மிக அழகுபொருந்திய தாழ்ந்த பலவாய கூந்தலில் அணிபெறச் சூடி; காண்பதற்கு அளவு கடந்த விருப்ப மிகுதலாலே; நம்மை இப்பொழுது கைவிட்டிருக்கின்ற தலைவனை எவ்வாறு சென்று சேர்வோம்?

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது. - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

நற்றிணை - 314. பாலை

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்  5
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக, கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய-
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள்  10
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!  

நொடித்து விட்டாற் போன்ற காய்கள் ஒலியெழும்பத் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற பாவைபோன்ற கிளைகளிலேறி; தனியே இருத்தலைக்கொண்ட புல்லிய புறாவானது தான் விரும்பிய பெடையைப் புணர்ந்ச்சிக் குறிப்பால் அழையா நிற்கும்; வெயிலின் வெப்ப மாறாத நீண்டிருக்கின்ற சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்தாம்ந்; ஆயுள் முதிர்ந்து யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீண்டொருகாலத்து இளமைப் பருவத்தை விரும்பினாலும் தவறியேனும் அடைபவர் அல்லர்; தாம் வாழ்நாளின் வகையினளவை அறிபவருமில்லை; ஆதலால் மாரிக்காலத்து மலர்கின்ற சிறு சண்பகத்தின் ஈரிய இதழ்களையுடைய மலரை நறிய வயிரம் முற்றிய சந்தனத்தை அரைத்துப் பூசிய மேல் மாலையாக அணிந்த மார்பிலே; குறுகிய புள்ளி அமைந்த இளைய அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள் நெருங்க அணைத்திருந்தபடியே; கங்குல் கழியக்கடவதாக என்று முன்பு கூறிய தம் மொழியளவில் வன்னெஞ்சு உடைமையாற் பொய்த்தனர்; அங்ஙனம் பொய்த்ததனால் ஒரேதமுமின்றி நீடு வாழ்வாராக;

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - முப்பேர் நாகனார்

நற்றிணை - 315. நெய்தல்

ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு,  5
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல்,  10
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே.  

நெருங்கிய பெரிய தெய்வமெனப் பெயர்கொண்ட யாண்டுகள் பல சென்றதனாலே; கரையையடுத்த துறையிலே கடனீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய வுதவாது ஒழிந்த முரிந்த வாயையுடைய தோணியை; நல்ல எருது முன்புள்ள நடையின் சிறப்பு நீங்கியதேயென்று அதனை உழவர் புல்லையுடைய தோட்டத்திலே தொழில் செய்யாதபடி விட்டொழிந்தாற்போல; நறிய வாசனையுடைய நல்ல தூமங் கொடாராய்; சிறிய மலரையுடைய ஞாழலொடு சேர்ந்தோங்கிய புன்னையின் கொழுவிய நிழலிலே குடமுழாப்போன்ற அந்த மரத்தின் வேரடியிலே பிணித்துப் போகடுந் துறையையுடைய தலைவனே!; பெரிதும் சிறப்பினதாகக் கொண்ட நட்பின்கண்ணே நுட்பமாகிய தவறும் வாராதபடி நன்றாக அறிந்து நடக்க வேண்டும். அதனை நீ அறியாயாயின்; நின்னால் விரும்பப்படுவோர் எம்மைப் போல நெகிழ்ந்த தோளும் கலுழ்ந்த கண்ணும் உடையராய் மலர்ந்து முறையே உதிர்ந்து கழியாது மலர்ந்தவுடன் தீய்ந்தாற் போல்வர்காண்;

தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது. - அம்மூவனார்

நற்றிணை - 316. முல்லை

மடவது அம்ம, மணி நிற எழிலி-
மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என,
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்  5
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே.  10

தோழீ! கேட்பாயாக! முன்பு மலரையுடைய முல்லையைச் செவ்வையாகக் காட்டிக் கயல் போன்ற மையுண்ட கண்ணையும் கனவிய குழையையுமுடையாய்!; இம் முல்லை நின் பற்கள்போன்ற அரும்பை யீனும் பொழுதில் யாம் நின்னை யெய்துவேமென்று கூறி; இடமகன்ற ஆகாயத்தில் எழுகின்ற திங்களோ என ஐயுற்றறியும்படியாகிய நினது நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்துச் சென்ற நங் காதலர்; தாம் நம்மை விரும்பும் விருப்பமுடையராய் வருதலின்றி வாராது அங்கிருக்கும் இக்காலத்தில்; சுரத்து நெறியையுடைய மலைமேலே அதன் பக்கமெல்லாம் மறையுமாறு காலிறங்கி; நீர்த்துளியைப் பெய்யும் தண்ணிய மேகம் அம் முல்லைகள் அரும்பும்படி மழையைப் பெய்து; அகன்ற ஆகாயத்தினிடத்திலே இடியிடித்தலையுஞ் செய்யாநின்றது; ஆதலின் நீலமணிபோலும் நிறத்தையுடைய இம் மேகம் அறியாமை யுடையதுகாண்; இது மிக்க வியப்பு;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - இடைக்காடனார்

நற்றிணை - 317. குறிஞ்சி

நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை  5
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து
என் ஆகுவகொல்தானே- எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே?  10

நீண்ட கரிய மலையிலே பிடியானையொடு கலந்த பொலிவுற்ற முகத்திலே புள்ளியையுடைய களிற்றியானையின் தூக்கிய கைபோல; மேலிலையகத்தினின்றும் நீண்டு வளைந்த பசிய தினைக்கதிரை; பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் கொய்துகொண்டுபோகாநிற்கும் உயர்ந்த மலைநாடனே!; நீ விரும்பிய இத் தலைவியிடத்து வைத்திருக்கும் களவொழுக்கத்தாலாகியநட்பை எம்மன்னை அறிகுவாளாயின்; எந்தையினது உயர்ந்த மலைச் சாரலினுள்ள இனிய சுனையிலே நீராடி; தோழியரோடு சென்று பறித்த அச் சுனைக் குவளையின் கரிய இதழ்களையுடைய சிறந்த மலரையொத்த கண்கள்; நீர்கலந்து வடியப் பெற்று இனி எப்படியாகி முடியுமோ?

தோழி, தலைமகனை வரைவு கடாயது. - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
 
நற்றிணை - 318. பாலை

நினைத்தலும் நினைதிரோ- ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை  5
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?  

ஐயனே! அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளையிலுண்டாகிய இலை தீய்ந்தமையாலே பொருந்தாத புள்ளி பட்ட நிழலின்கண்ணே இருந்தேமாக; அப்பொழுது நம்மை நடுக்கப்படுத்தாது தான் அடையுமிடத்தில் வந்து தழையை ஒடித்துத் தின்னுதல் கொண்ட உயர்ந்த தந்தத்தையுடைய யானை; தன் புள்ளியையுடைய நீண்ட கையைச் சுருட்டித் தூக்கி வேறொன்றனை அறிகின்றதன் காரணமாக இடையீடுபட்டுப் பிளிற்றியவுடன்; அதனை வேறாக வுணர்ந்து வெயில் பரவிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; புல்லிய தலையையுடைய இளைய பிடியானை புலம்பிய குரலைக் கேட்டிருந்தீரன்றோ?; அதனை நினைத்தலும் செய்வீரோ? செய்வீராயின் கொடிய சுரநெறியில் ஏகாதிருத்தலுடன் இவளைப் பிரியத் தக்கீருமல்லீர்;

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ

நற்றிணை - 319. நெய்தல்

ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே;
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்,  5

அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்,
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும் பொழுதும்,  10
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?  

கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதை தாது உளர் கானலும் தௌ என்றன்று ஊதைக்காற்று மகரந்தத்தைக் கிண்டுகின்ற கழிக்கரைச் சோலையும் பொலிவு அழிந்ததே!; மணல் மிக்க இம் மூதூரின்கண் உள்ள அகன்ற நெடிய தெருவிலே கூகையின் சேவல் அதன் பெண் பறவையொடு சென்று மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் யாவர்க்கும் அச்சமுண்டாகும்படி குழறா நிற்கும்; பேய்களும் வெளிப்பட்டு உலவாநிற்கும்; ஒருவரையொருவர் அறிதற்கியலாது மயங்கிய அத்தகைய இரவு நடுயாமத்தில்; கொல்லிப் பாவைபோன்ற பலரும் ஆராயும் அழகையும் அகன்ற மெல்லிய பருத்த தோளையுமுடைய மடப்பமிக்க இளமடந்தையினது; தேமல் படர்ந்த அழகிய கொங்கையை முயங்குதல் கருதி; மீன்கள் உறங்கும் இராப்பொழுதெல்லாம் யான் கண் உறங்கிலன்; ஆதலின் இனி என் நிலை எத்தன்மையதாய் முடியுமோ? அறிந்திலேன்;

காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது. - வினைத்தொழில் சோகீரனார்

நற்றிணை - 320. மருதம்

விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்? என்றி ஆயின்-
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,  5
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.  10

ஊரிலே செய்யப்படுந்ந் திருவிழாவுஞ் செய்து முடிந்தது; மத்தளமும் ஓசை யொழிந்தது; இக் காலத்து இவள் யாது கருதினாளோ? என்று கேட்பாயாயின் கருதியது கூறாநிற்பேன்; ஒருநாள் உடுக்குந் தழையை அணிந்து அத் தழையசையும் அல்குலையுடையாளாய்த் தெருவின்கண்ணே இவ்விளையோள் சென்ற அவ்வொரு காரணத்திற்காக; பழைமையாகிய வெற்றியையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான் உடனே அவ்வோரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே; புகுந்ததைக் கண்ட அக் காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சலிட்டாற்போல; இவ்வூரிலே கல்லென்னும் நகையொலி உண்டாயிற்று; அந் நகையொலியைக் கேட்டலும் இவள் நங்களுடைய கேள்வரைக் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்றெண்ணி ஆராய்ந்தணிந்த வளையையுடைய அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதர்கள் காவல் செறியச் செய்து; தம்தம் கொழுநரைப் பாதுகாத்துக்கொண்டு நன்மையடைந்தார்கள்; அங்ஙனம் அவரவர் பாதுகாத்ததனால் இவள் செயல் பயன்படாமையின் இவனைக் கைக்கொண்டகன்றனள் காண்; இவட்கு இஃதோர் அரியசெயலன்று;

பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 321. முல்லை

செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை,  5
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே.  10

திருத்தமாகச் செய்த கலன் அணிந்த என் காதலி; சிவந்த நிலத்தையுடைய காட்டின்கண்ணே சிறிய மயிரையுடைய யாடுகளின் தௌபிந்த ஓசையினிய மணிகளைக் கழுத்திலே பூட்டப்பட்ட கூட்டமெல்லாம் தாம் மேய்வதையொழித்துத் தொழுவம் புகுமாறு பெயராநிற்ப; கானத்தின்கண் உள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைச் சாரலின் புறத்து உள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடாநிற்ப; ஆதித்த மண்டிலம் அத்தமனக் குன்றை அடைகின்ற ஒளி மழுங்கிய மாலைப் பொழுதில்; யான் இல்லாமையால் புல்லென்ற வறுவிய மாளிகையை நோக்கி மெல்ல வருந்தாநிற்பளோ?; பாகனே! நமது தேரை விரைவிலே செலுத்திக் காண்!; சென்று அழகிய குருந்து மலர்கின்ற காட்டின்கண்ணே நெருங்குதலும்; பெரிய ஒலியையுடைய நம்மூரின் மரங்கள் தோன்றா நிற்கும் ஆதலின் நின்தேர் விரைவிலே செல்லுவதாக!;

வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

நற்றிணை - 322. குறிஞ்சி

ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;
வாய்கொல் வாழி- தோழி! வேய் உயர்ந்து,
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்,  5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன்  10
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.  

தோழீ! வாழ்வாயாக!; மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசி¬யைப் போக்க வேண்டி; மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண்ணிதாய்க் கமழ்கின்ற அகன்ற மார்பை உரிமையாகப் பெறாமையால் உண்டாகிய நல்ல நுதலிலே பசப்பெய்திய நினைத்தல் மிக்க நீங்குதற்கரிய இந் நோய்; முருகவேள் அணங்கியதால் உளதாயிற்றென்று அன்னை அறியும்படி சொல்லி; படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாய வாச்சியம் ஒலிக்கப் பாடி; பலவாய பூக்களைத் தூவித் துதித்து இவ் யாட்டினை ஏற்றுக்கொள் ளென்று, அதனை அறுத்துக் கொடுக்கும் பலிக்காக; அவ்வண்ணம் இந் நோய் தணிவதாயினோ; எவ்விடத்தும் இதனினுங் காட்டில் கொடியது பிறிதொன்று இல்லை கண்டாய்; அவ்வண்ணம் தணியு மென்பது மெய்ம்மைதானோ? ஆமாயிற் கூறுவாய்;

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம். - மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

நற்றிணை - 323. நெய்தல்

ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை
நடுவணதுவேதெய்ய- மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை  5
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே;  10
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே.  

நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழிய விட்டு நின்னுடைய உறவைக்கொண்ட வளையணிந்த முன்னங்கையையுடைய நல்ல நின் காதலிக்குத் தந்தையின்; சிறு குடியையுடைய பாக்கமானது; உயர்ந்து தோன்றுகின்ற இனிய கள்வடிதலையுடைய பனைகளின் நடுவின் உளதாயிராநின்றது கண்டாய்; மடப்பம் வருதலையுடைய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரையொருவர் அறியாதபடி அவ்விடத்திலேயே இருப்போம்; ஆங்கே புலியின் வரிபோன்ற மணல் மிக்க திடரில் இருக்கும் புன்னையினின்று உதிர்ந்த நிரம்பிய பராகத்தை உண்ணுகின்ற பெண்வண்டுகளுடனே; ஆண் வண்டுகளும் முரலுகின்ற இனிய ஓசை மிக்கு ஒலித்தலால் நினது திண்ணிய தேரின் விளங்கிய மணிகள் ஒலித்தலைப் பிறர் கேட்டலும் அரியதாகும்; அங்கு நீ வருதற்கு உரிய நெறியும் இதுவேயாகும்; ஆதலினாற் சேர்ப்பனே மறவாது வந்து கூடுவாயாக!

தோழி இரவுக்குறி நேர்ந்தது. - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

நற்றிணை - 324. குறிஞ்சி

அந்தோ! தானே அளியள் தாயே;
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?-
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின்  5
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!  

பொன் போலுகின்ற மேனியையுடைய தன் புதல்வியாகிய இவளுடைய விருப்பத்தின்படி நடத்துபவள் ஆதலால்; இவளை ஈன்ற தாய் யாவராலும் இரங்கத்தக்காள்; அவள் தான் நொந்து அழிகின்ற அவலமுடனே இனி எவ்வண்ணம் ஆகுவளோ?; ஐயோ! தந்தங்கள் முற்றிய யானை தனது காட்டில் நிறையப் பெருகியதால் அத்தகைய செல்வமுடைய நெய் பூசினாலொத்த வலிய காம்பு பெருகிய வேற்படை ஏந்திய தந்தையினது; அகற்சியையுடைய இடத்தில்; விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல; ஓடியோடி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளுடைய மிக்க பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் நடைபயிற்றா நிற்குமே!

தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம். - கயமனார்

நற்றிணை - 325. பாலை

கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்,  5
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று- இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ?- பெரும!- தவிர்க நும் செலவே.  

பெரும! இவளுடைய நீலமலர் போன்ற மையுண்ட கண்களின் புதிய அழகு சிதையும்படி மிக்க நீர் வடிதலைக் கண்டு வைத்தும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையுமுடைய ஆண்கரடி; தான் இரை தேடி உண்ணும் விருப்பத்தினால் இரவிலே சென்று; நீடிய செய்கையையுடைய கறையான் கூட்டம் செய்து உயர்த்திய பாம்புகள் வாழ்கின்ற புற்றில் உள்ள இச் சிதலை ஒருங்கே ஒழியும்படி ; விரைவாக ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து உள்ளிருக்கும் குரும்பி முதலாயவற்றை உறிஞ்சி இழுக்காநின்ற உள்ளத்தால் நினைத்தற்குமரிய கவர்த்த சுர நெறியிலே; கடந்து நீயிர் செல்லத்தகுமோ?; (தகாது) ஆதலால் நீயிர் செல்லுவதைத் தவிர்ப்பீராக!;

தோழி செலவு அழுங்குவித்தது. - மதுரைக் காருலவியங் கூத்தனார்

நற்றிணை - 326. குறிஞ்சி

கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல்- இவட்கே  5
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே.  10

கொழுத்த சுளையையுடைய பலாவின் பயன் மிக்க மலைப் பக்கத்தில் செழுமையாகிய காய் காய்த்துப் பருத்தலாலே தாங்கமாட்டாது வளைந்த கரிய கிளையிலே வந்து தங்கிய; கொக்கானது மீனைக் கொணர்ந்து குடைந்து தின்னுதலால் உண்டாகிய புலவு நாற்றம் பொறுக்கவியலாது; ஆங்குள்ள பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மா நிற்கும் மலை நாடனே!; பலநாளும் அறியப்படுகின்ற அமர்ந்த அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டெனினும்; இன்ன காரணத்தாலே தோன்றினவென்று நம்மால் உணரப்படாதனவாகி; நீல மலர் போலப் பொருந்திவரும் இவளுடைய கண்ணில்; நுண்ணிய கொடிப் பீர்க்கின் மலர்ந்த பிற்றை நாள் உதிரும் பழம் பூவின் நிறம்போலப் பசலை உண்டாகாநிற்கும்; அதனை நினக்குச் சொல்லவும் யான் வெட்கமுடையவளாயிராநின்றேன்; இவட்கு இத்தகைய துன்பம் வாராதபடி காப்பாயாக;

தோழி, தலைமகனை வரைவுகடாயது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 327. நெய்தல்

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே- காதல்அம் தோழி!-
அந் நிலை அல்லஆயினும், சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று, உடன் அமர்ந்து,  5
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே- போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.  

என்பால் அன்பு மிக்க தோழீ!; நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்கும் சான்றோராகிய தலைவரை நாம் விரும்பி ஒழுகுதல் பழியுடையதாமெனில்; தூங்காதனவாய் அழுகின்ற கண்ணோடு ஏக்கத்தால் இளைத்து இறந்து போதலும் இனியதாகும்; அவ்வாறு இறப்பது இயல்புடையதன்றாயினும்; சால்புடையவர் தாஞ்செய்யும் கடமையிலே குறைபடார் என்று; சேரப்பொருந்தி உலகம் கூறுவது உண்டெனக்கொண்டு; அரும்புகள் மலர்கின்ற புன்னைமர மோங்கிய சோலையையுடைய தண்ணிய துறைவரது மெத்தென்ற மார்பை; நிலையாகப் பெறத்தக்க தன்மையுடையே மானாலும் அஃது உரியதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றை அடைவது நலமாகுமன்றோ?

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது. - அம்மூவனார்

நற்றிணை - 328. குறிஞ்சி

கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து,
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,
அது இனி வாழி- தோழி!- ஒரு நாள்,  5
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு,
பெரும் பெயல் தலைக, புனனே!- இனியே,
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்,
விலங்கு மலை அடுக்கத்தானும்,  10
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.  

தோழீ! கிழங்குகள் கீழிறங்கித் தேனடைகள் மிகுதியாக மேலே வைக்கப்பட்டு; மிகச் சிலவாய தினைகளை விதைத்து அவை மிகப் பலவாக விளைதலும்; அவற்றைக் கிளி கொய்து போகாதபடி ஓப்பிப் பாதுகாக்கும் பெரிய மலை நாடனுடைய; பிறப்பு மிக உயர்வுடையதேயன்றி நம்மோடு ஒத்த ஒரு தன்மையதன்றென்பதை அறிந்தனம்; அதனால் அப் பிறப்பு இனி என்றும் வாழ்வதாக! அத்தகைய உயர்பிறப்பினனாதலின் அவன் கூறியது பிறழான்காண்; முதன் மழை பெய்தவுடன் வருவேன் என்றனன் ஆதலின், இனி எள்ளைப் பிழிந்தெடுக்கும்நெய்யையும் வெளிய கிழியையும் விரும்பிப் பெறாது; சந்தனமரம் மிகுதியாகவுடைய உயர்ந்த பெரிய மலைச்சாரலிலே குறுக்கிட்ட மலையின் புறத்திருக்கும் பக்கமலையிடத்து; நன்கலம் பெற்ற விறலி கூத்தயரா நிற்கும் இவ் வூரிலுள்ள நம்முடைய தினைப் புனத்தில்; அந்த மேகம் சிறிய பலவாய மின்னல் முதலாய தொகுதிகளையுடையதாகி வலமாக எழுந்து பெரும் பெயலை ஒருநாள் பொழிந்து விடுவதாக; பெய்த அன்றே வருகுவனாதலின் நீ வருந்தாதே கொள்!

தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது. - தொல் கபிலர்

நற்றிணை - 329. பாலை

வரையா நயவினர் நிரையம் பேணார்,
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி  5
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி- தோழி!- உதுக் காண்:
இரு விசும்பு அதிர மின்னி,  10
கருவி மா மழை கடல் முகந்தனவே!  

தோழீ! வாழ்வாயாக!; அளவு படாத நயமுடையராய் நிரையம் போன்ற தீய நெறியைக் கைக் கொள்ளா தொழுகும் நங்காதலர்; சுரத்திலே கொன்று போகடப்பட்ட மக்களினுடைய கொலையுண்ட பிணங்களில் உள்ள நிறைந்த தீ நாற்றத்தையுடைய அவற்றின் அருகிலே சென்று பறித்துத் தின்ன இயலாது; ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போயிருந்த புள்ளிகளையுடைய முதிய பருந்து தன் சிறகை அடித்துக் கொள்ளுதலால் உதிர்ந்த பறத்தலையுடைய புல்லிய இறகை; சிவந்த அம்பிலே கட்டிய வீரத்தன்மையுடைய மறவர்; தாம் வெற்றி கொள்ளும் கருத்துடனே நெறியைப் பார்த்து உறைகின்ற மலைவழியிலே சென்றனராயினும்; நம்மைக் கைவிட்டு அங்கே தங்குபவரல்லர்; அவர் கார்காலத்து வருவே மென்றார் ஆதலின் உவ்விடத்தே பாராய்! கரிய ஆகாயம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கடனீரை முகந்து வந்தன; அவர் இன்னே வருகுவர் போலும்;

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது. - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

நற்றிணை - 330. மருதம்

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்  5
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும்,
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,
நன்றி சான்ற கற்பொடு  10
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.  

வளைந்த கொம்பையும் வலிமை பெற்று விளங்கிய பிடரியையும் உடைய கரிய எருமைக்கடா; இள நடையையுடைய பலவாகிய நாரையின் கூட்டம் எல்லாம் இரிந்தோடும்படியாக; நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே துடும் என்னும் ஒலியுண்டாம்படி தான் காலையில் உழுத தொழிலின் வருத்தம் நீங்குமாறு பாய்ந்துகிடந்து; தன்னுடம்பின் அயா நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருள் நிரம்பிய மருதமரத்தின் இனிய நிழலின் கண்ணே தங்கியிருக்கும்; புது வருவாயினையுடைய ஊரனே!; நின்னுடைய மாட்சிமை பொருந்திய கலன் அணிந்த பரத்தை மகளிரை எமது மனையின்கண் அழைத்துவந்து; நீ குலமகளிரைப் போலக் கருதி மணந்து தழுவியிருந்தாலும்; அவருடைய புல்லிய மனத்திலே கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுதல் அரிதேயாகும்; அவரும் பசிய வளையணிந்த புதல்வியரையும் புதல்வரையும் ஈன்று; நன்மையமைந்த கற்புடனே எம் பக்கத்து அமர்தலும்; அதனினுங் காட்டில் அரிய தொன்றாகும்; அங்ஙனமாதலை நீ அறிந்தாய் அல்லை போலும்;

தோழி, தலைமகனை வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்

நற்றிணை - 331. நெய்தல்

உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை,
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி,  5
எந்தை திமில், இது, நுந்தை திமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம்  10
பிறர் பிறர் அறிதல் யாவது-
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.  

ஆங்குப் புலவு நாற்றத்தையுடைய மீனை உப்புப் படுத்துப் புலர்த்தும்பொழுது அவற்றைக் கொண்டுபோகவந்து விழுங் காக்கை முதலாய புள்ளினங்களை யோப்பி; மடப்பம் பொருந்திய நோக்கத்தையுடைய தோழியர் உடனே; உழாது விளைவிக்கும் நெய்தனில மாக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைகின்ற உப்பினை; செறிவுடைய உப்பு வாணிகர் வருகின்ற காலம் நோக்கிந்க் கழிக்கரைச் சோலையருகிலே குவடாகக் குவித்த காவலையுடைய குவியலாகிய; அவ்வுப்புக் குவட்டில் பரதவர் மகளிர் ஏறி நின்று; இங்கு வருகின்றது எந்தையின் மீன் படகாகும் அங்கு வருகின்றது நின் தந்தையினது மீன் படகாகும் என்று; வளைந்த கடனீரில் வேட்டைமேற் சென்ற சுற்றத்தாருடைய வலிய மீன் படகுகளை எண்ணுகின்ற தண்ணிய கடற் சேர்ப்பனே!; வெறுத்தலைக் கருதாத எம்முடைய நல்லவூர் மிக இனிமையுடையதாய் இரா நின்றது; இப்பொழுது முதலாக என்று வந்தாலும் யாதோர் ஊறுபாடும் இல்லை; சுற்றத்தார் ஒருவரையொருவர் அறியாத சேரியை உடையதாதலால்; எவ்வளவேனும் அயலார் ஒருவரையொருவர் அறிவது எவ்வண்ணமியலும்?; ஆதலின் நீ அச்சமின்றி வருவாயாக!

தோழி இரவுக்குறி நேர்ந்தது. - உலோச்சனார்

நற்றிணை - 332. குறிஞ்சி

இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ-
குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை,  5
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?  10

இகுளையாகிய தோழீ! நீரிலிறங்கி நின்று குவளைமலர் கொய்பவர் தாம் நீர் வேட்கையால் வெய்துற்றாற் போல; நின்னுடைய தோள்கள் நாள்தோறும் காதலனுடைய தோள்களை முயங்கி வைகிய வழியும்; நின் கைவளைகள் முன்பு நிலைத்திருந்த இடத்தினின்றும் கழலா நிற்பன என; பலகாலும் மாட்சிமைப்பட நீதான் உரையா நின்றனை; துறுகல்லை அடுத்த மலைப் பிளப்பிடத்தே குட்டிகளை யீன்ற கரிய பெண் புலியுற்ற பசியைப் போக்க வேண்டிப் பெரிய கொலைத் தொழிலை மேற்கொண்ட வலிமையுடைய ஆண்புலி; இரை வேட்கையாலே பதுங்கியிருக்கின்ற தாழ்வரையில் உள்ள சிறிய வழியிலே; இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போன்ற விருப்ப மிகுதியுடையனாய்ப் பல நாளும் இயங்குதற்கரிய இருளில் வருதலைக் காண்கின்ற எனக்கு; என் வளை முதலாய கலன்கள் கழலாதவாறு செறிப்பது எவ்வண்ணம் ஆகும்; இங்ஙனம் என் உடம்பு இளைத்தலின் இனி எப்படியாய் முடியுமோ?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம். - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

நற்றிணை - 333. பாலை

மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து,  5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி,
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து,
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்;
நீங்குகமாதோ நின் அவலம்- ஓங்குமிசை,
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி  10
நயவரு குரல பல்லி,
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே.  

தோழீ!; உயர்ந்த இடத்தில் உயர்ந்த புகழையுடைய நல்லவீட்டின் கண்ணே; செறிந்த இரவு நடு யாமத்தில் நாம் நம் காதலரை நினைக்குந்தோறும்; இனிமையான குரலையுடைய பல்லி; ஒள்ளிய சுவரிலே பொருந்தி நின்றுநன்மையான சொற்களைக் குறிப்பாற் கூறாநின்றது; ஆதலின் மேகம் தான் செய்ய வேண்டிய பெய்தற் றொழிலை இன்மையாக்கிக் கரிய ஆகாயத்திலே சென்றொழிந்ததனால்; வெப்பமிக்கு மூங்கில் எல்லாம் வாடி அழகழிந்த மலை வழியின் சிறிய நெறியிலே; பருக்கைக் கற்கள் நிரம்பிய பள்ளத்தில் ஊறுகின்ற மிகக் குறைவுபட்ட சிறிய நீரிடத்தில்; பொலிவு பெற்ற நெற்றியையுடைய யானையொடு புலி போர் செய்து அந் நீரையுண்ணுகின்ற சுரநெறியிலே சென்று; ஈட்டப்படும் பொருள் நமக்கு அரியவாம் என்று நினையாமல் நல்லறிவிழந்து, உள்ளே மகிழ்ச்சியுற்ற வன்மைமிக்க நெஞ்சுடனே தாம் வண்மைமிக்குடையராயிருத்தலை விரும்பி; அரிய பொருள் காரணமாக அகன்ற நங் காதலர்; நின்னை முயங்குவதை எதிர் நோக்கித் திருத்தமாகிய கலன்களை அணிந்த நின் பருத்த தோளை இன்றுவந்து கூடுவார் போலத் தோன்றாநின்றது காண்!; இனி நின் அவலம் நீங்குவாயாக!

பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது. - கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்

நற்றிணை - 334. குறிஞ்சி

கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்-  5
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ- தோழி!- நம் இன் உயிர் நிலையே?  

தோழீ! கரிய விரலையும் சிவந்த முகத்தையுமுடைய பெருங்கூட்டமாகிய முசுக்களைச் சுற்றமாகவுடைய பெண்குரங்கு; பெரிய மலைப்பக்கத்து அருவியில் விளையாடி; உயர்ந்த மூங்கிலிலேறி அதன் நுனியை ஊசலாகக் கொண்டு ஊசலாடி; மலையில் வேங்கையின் அழகிய நறிய மலர் அங்குள்ள சுனையிலே மிக உதிர்ந்து விழும்படி அதன் கிளையிலேறிக் கடுவனொடு புணராநிற்கும் மலையகநாடன்; மழை பெய்கின்ற மாந்தர் இயங்குதற்கரிய இருள்நிறைந்த நடுயாமத்தில்; அருவியையுடைய மலைப்பக்கத்தின் கண்ணதாகிய நெறியில் ஒப்பற்ற வேற்படையை யேந்தி; மழையின் மின்னலானது இருளைப் பிளக்க அம்மின்னல் விளக்கத்தில் வருவதாகக் கருதினனென்றால்; அவன் வருநெறியை நினைந்து வருந்துகின்ற நம்முடைய இனிய உயிர் இனி எவ்வாறு நிலைத்திருக்குமோ? அறிகின்றிலேன்;

தோழி இரவுக்குறி முகம் புக்கது.

நற்றிணை - 335. நெய்தல்

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,  5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று;  10
காமம் பெரிதே; களைஞரோ இலரே!  

திங்களும் விளங்கிய விசும்பின்கண்ணே எழுந்து தோன்றாநிற்கும்; மெல்லிய நீர்மையிற் பொங்கி எழுகின்ற அலையையுடைய கடலும் ஒலி அடங்கியதில்லை; ஒலிமிகுந்து அக் கடனீரும் கரையை மோதிப் பெயர்ந்து செல்லாநிற்கும்; நிறைந்த கழிநீர் சூழ்ந்த பலவாய அழகிய கடற்கரைச் சோலையின்கணுள்ள முள்ளையுடைய இலை மிக்க தாழை; சோற்றைச் சொரிகின்ற குடம்போலப் பருத்த உள்ளீட்டினையுடைய கூம்பிய அரும்பு மலராநிற்ப; காற்றானது அப் பூ மடலினுள்ளே புகுந்து பரவி வந்து வீசுகின்ற கெடாத நறுமணத்தடனே; கரிய பெரிய பனைமேலிருந்து துன்பத்தைத் தருவனவாய் வருத்துகின்ற அன்றிற் பறவையும் என் பக்கத்தே வந்து ஒலியாநிற்கும்; இவையேயன்றி, விரலாலே தடவி வருந்தி இசை கூட்டிய விருப்பத்தைச் செய்யும் நல்ல யாழும் இரவு நடுயாமத்து யான் உயிர் வைத்து உய்யாவாறு இசையாநின்றது; அவை அனைத்தினுங் காட்டில் யான் கொண்ட காமமோ பெரிதாயிராநின்றது; இதனைப் போக்க வல்ல காதலரோ அருகில் இல்லாது ஒழிந்தகன்று போயினார், இனி யான் எவ்வாறு உய்குவேன்?

காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

நற்றிணை - 336. குறிஞ்சி

பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி,  5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்- அரவின்
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,
இரை தேர் எண்கினம் அகழும்  10
வரை சேர் சிறு நெறி வாராதீமே!  

சிலிர்த்த மயிர் மிக்க பிடரினையுடைய ஆண்பன்றி; தோலாய் வற்றிய கொங்கையையுடைய பெண்பன்றியுடனே சென்று திரண்ட அடித்தண்டுடைய தினைக் கதிரை அளவின்றித் தின்றழித்ததனாலே; கானவன் மலைவழியிலுள்ள செல்லுதற்கரிய சிறிய புழையருகிலே பதுங்கியிருந்து; வில்லினால் எய்து கொன்று தந்த வெளிய கோட்டினையுடைய அவ்வாண் பன்றியை; அலங்கரித்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்துத் தன்சுற்றமாகிய குடிகள் இருக்குமிடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடாநிற்கும்; நெடிய மலை நாடனே!; மிக்க வலிய சினமுடைய களிற்றியானை அங்கு வருகின்ற புலியின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கும் இரவின்கண்ணே; நீ இங்கு வருதலை அஞ்சுகின்றனையல்லை; அதனை நினையாமுன் யான் அஞ்சாநிற்பேன்; ஆதலின் பாம்பு உறைகின்ற ஈரிய புழையையுடைய புற்றை மேகம் போலச் சூழ்ந்துகொண்டு இரையிருப்பதனை யாராய்கின்ற கரடியின்ந் கூட்டம் பறித்து எடாநிற்கும்; மலையையடுத்த சிறிய நெறியில் இனி வாராதொழிவாய்காண்!;

ஆறு பார்த்துற்றுச்சொல்லியது. - கபிலர்

நற்றிணை - 337. பாலை

உலகம் படைத்த காலை- தலைவ!-
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே-
முதிரா வேனில் எதிரிய அதிரல்,
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய  5
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே.  10

தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகை மலரையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய நுண்ணிய மயிரையுடைய சிறந்த மலரையும்; நறிய செங்கருங்காலி மலரையுங் கொய்து ஒருசேர உள்ளே செறித்திருந்த; பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போன்ற நறுமணம் ஒருங்கே அமையப்பெற்று அழகிய நல்ல நிறம் பொருந்திய; நீலமணி போன்ற ஐந்துபகுதியாக முடித்தற்குரிய சரிந்து விழுகின்ற; வண்டுகள் மெல்ல ஒலித்தலையுடைய நறிய கூந்தலினுடைய; அருமையாகப் பெறுகின்ற பெரிய பயனைக் கொள்ளாது; பிரிந்து உறைகின்ற பகுதியையுடைய பெரிய பொருளீட்டி வாழ்வோர்; இவ்வுலகத்தைப் படைத்தகாலம் முதற்கொண்டு அடைந்தாரைப் பாதுகாக்க வேண்டுமென்று அவ்வண்ணமே நிகழ்ந்து வரும் அறநெறியை மறந்துவிட்டனரோ?; அங்ஙனம் மறந்த தகுதிப்பாட்டினையுடை


யோர் சிறந்தோரேயாவார்;

தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம். - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 338. நெய்தல்

கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;
நிறுத்தல் வேண்டும் என்றி; நிலைப்ப  5
யாங்ஙனம் விடுமோ மற்றே!- மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய,  10
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?  

கடிய கதிரையுடைய ஞாயிறும் மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றின் கண்ணே மறைந்தொழிந்தது; அடும்பின் கொடிகள் துண்டித்து விழும்படி தேருருள் ஊர்ந்து வருமாறு அவருடைய நெடிய தேரின் இனிய ஒலி இரவு இத்துணைப் பொழுதாகியும் தோன்றினபாடில்லை; காமநோய் தன் எல்லையளவையுங் கடந்து தோன்றி என்னை நலியாநின்றது; இவை போதாமல் இன்னும் காமமயக்கம் மீதூருமாறு துன்பத்தைச் செய்யும் நாரையானது; அகன்ற காபிய கழிப்பரப்பின் கண்ணே எழுந்து சென்று இரைதேடி யருந்தி; அதன்பின் புலவு நாறும் நமது சிறிய குடியிலுள்ள ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தின்கண் உயர்ந்த காற்றால் அசைகின்ற பருத்த அடியையுடைய பனையின் தோடாகிய மடலில் ஏறியிருந்து; வளைந்த வாயையுடைய பேடை தன் குடம்பையில் வந்து தன்னோடு புணருமாறு; யான் கேட்டு உடனே என்னுயிரை விடுக்கும் வண்ணம் கடிந்து; தான் தன் பெடையொடு புணர்ச்சி துணியுமளவும் அதனைக் கூவுதலை நிறுத்தவில்லை; இத்தகைய பொழுதிலே என்னை நெருங்கி, நீ படுந்துயர் ஏதிலார் அறியாதபடி கரந்தொழுகவேண்டும் என்று கூறாநின்றனை; இந்நோய் இனி யான் உயிர்நிலைத்திருக்கும் வண்ணம் எப்படி என்னைவிட்டு ஒழியுமோ?

ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

நற்றிணை - 339. குறிஞ்சி

தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
அலர்வது அன்றுகொல் இது? என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள்போலும், அன்னை- சிறந்த  5
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு, நாளை,
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித்  10
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?  

தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து (நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது? என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இந்வ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது; நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தௌபிந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர் மேனியின் நிறம் இன்னும் எப்படியாமோ? என்று கூறினாள்; ஆதலால் பகைப்புலத்து வென்றி பெறுவதொன்றேயன்றித் தோல்வியுறாத நங் காதலர் நம்மைக் கைவிட்டு இனி அருள் செய்பவரல்லர்; அவருடனிகழ்ந்த இக் களவொழுக்கமானது புறத்தார்க்குப் புலனாகி அலர்தூற்றுந் தன்மையை எய்துமன்றோ? என்று; பெரிதும் வாட்டமுற்று நம்முள்ளத்துடனே புதியனவாய்ந்ச் சிலவற்றைக் கூறி; நாம் இருவரும் துன்பவெள்ளத்து நீந்துகின்றதனை அவ்வன்னை அறிந்து கொண்டனள் போலும்;

சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்

நற்றிணை - 340. மருதம்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்-
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,  5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன, என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!  10

மகிழ்நனே! பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானையையும் விரைந்து செல்லுந் தேரினையும் உடைய செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளத்து நீர் மடையடைத்திருந்தது திறந்துகொண்டோடியதனாலே; அக்குளத்தினின்றும் புறம்போந்து கால்வாயை யடைந்து சென்று திரும்பிய திரண்ட கோட்டினையுடைய வாளைமீன்; அக் கால்வாயினின்றும் சேற்றையுடைய வயலினுள்ளாலோடி; ஆங்கு உழுது வருகின்ற எருமைக்கடாவின் காற்சேறுபட்ட புள்ளியுடைய வெளிய மேற் புறத்தோடு செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர் தங் கைக்கோல் கொண்டு புடைத்தற்கும் அஞ்சாது பெருக்குற்று; நீர் பொருந்திய சேற்றின்மேல் வரம்படியிலோடி அப்பாற் போக இயலாமையால் அவ்வரம்படியிலே புரளுகின்ற; வாணனது காவிரியின் வடபாலுள்ள சிறுகுடி என்னும் ஊர்போன்ற; என்னுடைய கோற்றொழிலமைந்த அழகிய ஒளி பொருந்திய வளை நெகிழும்படி செய்த நின்னை; புல்லவுஞ்செய்யேன்; அதனால் நின்னை வெறுத்தேனுமல்லேன்; அயலாந் தன்மையேனாதலின் என்னைத் தீண்டாதேகொள்!

பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது. - நக்கீரர்

நற்றிணை - 341. குறிஞ்சி

வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்  5
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
துணை இலேம், தமியேம், பாசறையேமே.  10

இங்கு ஒரு குன்றின்மேற் காணப்படு மடந்தை வெள்ளி போன்ற வரிகளையுடைய கற்பாறையிலே விழும் அருவியாடி அதிற் சிறிது வெறுப்படையின்; சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டைச் சாடியின்வாயில் வைத்து அதன் நாவினால் காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளின் தௌபிவை (சாராயத்தை)ப் பருகி; அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து மரக்கொம்பினையொடித்து ஓங்கிக் காட்டிச் சில வார்த்தையைக் கூறி; குன்றகத்துள்ள தன் காதலனாகிய குறவனொடு சிறிய நொடி பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; இங்ஙனம் எம்மோடு எம் காதலி கள்ளின் தௌபிவைப் பருகிக் குறு நொடி பயிற்றி மகிழாவாறு யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் நாட்காலையிலே; கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; அத் துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்;

வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 342. நெய்தல்

மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும், அன்பு உடையோய்! என,  5
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:
யானே- எல்வளை!- யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
என் எனப் படுமோ? என்றலும் உண்டே.  10

அன்புடைய தோழீ! கானலின்கண் ஒருவர் என்பால் வந்து இரந்து கூறலும் அதனைப் பொறேனாகி என்வாயினால் நீ கூறும் மொழியைச் சென்று தலைவியிடம் கூறுகின்றிலேன், நின் குறை நீயே சென்றுரை யென்றதனாலே மயங்கி நின்று, குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறிவந்தும், இது காவலையுடைய மதில் என மதித்து வெளிய பேய்த்தேரைச் சென்று நோக்கியும்; நீ இருக்கின்ற சேரியைச் சார வருபவர்க்கு எக்காலத்தும் அருள் செய்ய வேண்டும் என்று; யான் கண்ணினால் இனியகுறிப்புத் தோன்றத் தலைசாய்த்துக் காட்டியும் ஒளிபொருந்திய வளையையுடைய தலைவி அவற்றை அறிந்துகொண்டனளல்லள்; ஆதலால் யானே வேலி சூழ்ந்த கடற்கரைச் சோலையில் வண்டுகள் உண்ணுகின்ற நறிய மலருதிர்ந்து நுண்ணியதாகக் கோலஞ் செய்த அவ்விடத்து; எனது தலை அவ்விறைமகளின் சிவந்த அடிகளிலே சேர்த்து வணங்கினால்; அத் தலைவர் செயல் இப்பொழுது எப்படியாயிருக்கின்றதோ? என்று என்னை வினாவலும் உண்டாகும்; அப்பொழுது நிகழ்ந்தவற்றைக் கூறுவேன்;

குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்க தன் சொற் கேளாது விடலின், இறப்ப ஆற்றானாயினான் என உணர்ந்து ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது.

நற்றிணை - 343. பாலை

முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை  5
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி- தோழி!- நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?  10

தோழீ! வாழ்வாயாக!; முல்லைக் கொடி படர்ந்த மலைவழி ஆகிய சிறிய நெறியைச் சாராது; அழகிய குடிகள் அமைந்த சிறிய ஊரின்கண்ணே; மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்துடைய தெருவின்கண்; செல்லுகின்ற ஆனிரையின் முதுகிலே தீண்டுகின்ற நெடிய வீழிடப்பட்ட கடவுள் உறையும் ஆலமரத்திலிருந்து; அங்குக் கடவுளுக்குப் படைத்துப் போகட்ட பலிச் சோற்றைத் தின்ற தொக்க விரல்களையுடைய காக்கைகள் எல்லாம்; துன்பத்தைத் தருகின்ற மாலையம் பொழுதிலே தம்தம் சுற்ற மிருக்குமிடத்தை அடையாநிற்ப; பிரிந்தாரை யொறுக்கும் படையுடனே வந்த நோயைச் செய்யும் இம் மாலையானது; நம்மைத் துறந்துபோய் ஈட்டுதற்கரிய பொருள் தேடுதலை விரும்பி; பிரிந்துறையும் நம் காதலர் சென்ற நாட்டின்கண்ணே செல்லுவதில்லையோ? சென்று வருத்தினால் அவர் இன்னே வந்திருப்பரே;

தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது. - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்

நற்றிணை - 344. குறிஞ்சி

அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின்- ஆயிழை!-
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை  5
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும்கொல் தானே- உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து,  10
செந் தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?  

ஆராய்ந்து அணிந்த இழையினையுடையாய்!; அழகிய மலைப்பக்கத்தில் வியப்புடையதாய் வளர்ந்த நீலமணி போன்ற தோட்டினையுடைய நிரம்பிய கருமையான தினைக்கதிர் எல்லாம்; பெரிய பிடியானையின் நெடிய கைபோல வளைந்துடைய பெரிய கொல்லையை; நாம் நாளை முதலாகக் காவல் செய்யக் கருதினேமாயின்; நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்தறியானாய்; தன் மலையிலுள்ள சந்தனத்தைப் பூசிய அழகு விளங்கிய மார்பில் வண்டுகள் மொய்த்துப் பெரிதும் ஆரவாரிப்ப; உயர்ந்த மூங்கிலையுடைய பெரிய மலையகத்துள்ள பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; கரிய புலி களிற்றியானையைத் தொலைத்து முழங்கும் பெரிய பூசலைக் கேட்டு இது முகிலின் இடிமுழக்கமாமென்று எண்ணி; சிவந்த தினை புலருமாறு போகடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்ற; இனிய மலையிலுள்ள புது வருவாயினையுடைய தான்; சாரலின் நெடிய வழியிலே தமரோடு உறையும் தன் ஊர்க்குச் செல்லுவான் கொல்லோ?

தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது. - மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்

நற்றிணை - 345. நெய்தல்

கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,
வெளிய விரியும் துறைவ! என்றும்,  5
அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தௌவே!  10

மிக்க காற்று மோதுதலானே கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசிய காய்; நீல நிறத்தையுடைய பெரிய கழியிடத்து உள்ளே சென்று பொருந்தும்படி விழுதலாலே; அது மோதப்பட்டு ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டாற் போன்ற வெளியவாய் மலராநிற்கும் துறைவனே!; எக் காலத்தும் கருணை செய்தலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மையுடையாரும்; தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேமென்று அரிய சூள்வைத்து அவர் தௌபியாத நெஞ்சுடனே செயலழிந்து வாடும்படி நெடுநாள் காறும் விரும்பாதிருப்பாராயின்; அங்ஙனம் தஞ்சமென்று புகுந்தார் தாம் உயிர்வாழ்வது எவ்வாறோ?; நீ இங்கு நயந்து தௌபிவிக்கும் தௌபிவு முழுவதூஉம் அழிந் தொழிவதாக; இவள் தான் படுகின்ற துன்பமெல்லாம் நுகர்ந்து அழிவாளாக!

தௌவிடை விலங்கியது. - நம்பி குட்டுவனார்

நற்றிணை - 346. பாலை

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட,  5
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று, நக்கனைமன் போலா- என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல்  10
மட மா அரிவை தட மென் தோளே?  

நெஞ்சமே! கீழைக்கடலிலே சென்று நீரை முகந்து மேலைத்திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணிதாகிய மேகம் மழைபெய்து விடப்பட்ட நிலத்தின் வெப்பந் தணிந்த காலத்து; அரசரது பகையால் அழிந்ததென்று சொல்லப்படும் அரிய ஊர்முனையடுத்த நெறியில்; வேலியையுடைய அழகிய குடிகள் அழிந்த சிறிய ஊரின்கண்ணுள்ள; மக்கள் இல்லாதொழிந்த பொது அம்பலத்தில் நெருங்கிய காற்று வீச முயற்சிகருதி யுறைகின்ற வீரத் தன்மையுடைய இருக்கையின் கண்ணே; இப்பொழுது எக் காலத்தும் நிறைவுற்ற திங்கள் போல விளங்குகின்ற பொறையனது; பெரிய தண்ணிய கொல்லி மலையிடத்துள்ள சிறிய பசிய மலைப்பச்சை சூடுதலால் அதன் மணஞ் செவ்விதிற் கமழ்கின்ற கூந்தலையுடைய; இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ கருதிமகிழா நின்றனை போலும்; அத் தோள்கள் இங்கு நீ எய்துதற்கரிய அல்லவோ?

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்

நற்றிணை - 347. குறிஞ்சி

முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
மாதிர நனந் தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
அழி துளி தலைஇய பொழுதில், புலையன்  5
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெரு வரை நாடன்,
நீர் அன நிலையன்; பேர் அன்பினன் எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய,  10
காண வீடுமோ- தோழி!- என் நலனே?  

தோழீ! வேனிற் காலத்து நுணலை மணலுள் முழுகி மறைந்து கிடப்பதுபோல என் உடம்பினுள்ளே பொதிந்து கரந்துறையும் என் நலனானது என்னை ஒறுத்துக் கொன்றொழிவதல்லது; முழங்குகின்ற கடலில் விழுந்து நீர் பருகியதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; திசைகளின் அகன்ற இடமெல்லாம் மறையும்படி பரவி; உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழுமாறு செய்து முழங்கிய இடியினாலே பாம்புகளை மோதி; விசும்பிலுயர்ந்த முடியையுடைய குன்றுகளை ஒருங்கே சூழ்ந்து; சிதைந்த மழையின் துளிகளை யாண்டும் பெய்தொழிந்த பொழுது; புலையனது அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணில் மோதுதலானெழுகின்ற ஒலிபோன்ற ஓசையுடனே அருவி நீர் கீழிறங்கி யோடும் பெரிய மலை நாடனாவான்; இன்னதொரு நிலைமையுடையன் பெரிய அன்புடையவன் என்று; பலவாய அவனுடைய மாண்புகளெல்லாங் கூறும் பரிசிலருடைய நெடிய சிறந்த மொழிகளை; யான் காணவும் கேட்கவும் அங்ஙனம் கண்டு கேட்டுக் களிக்குமளவும் என்னை உயிரோடு விடுமோ?; அவை இரங்கத்தக்கன;

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது. - பெருங்குன்றூர் கிழார்

நற்றிணை - 348. நெய்தல்

நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்  5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே?  10

நிலவோவெனில். நீல நிறமுடைய ஆகாயத்திலே பலவாய கதிர்களைப் பரப்பி; பால் நிரம்பிய கடல் போலப் பரந்துபட்ட தன்மையதாயிராநின்றது; இந் நிலா நாளில் இவ்வூரோவெனில் தழைத்துவரும் பேர் ஒலியுடனே நிறைந்து ஒருசேரக் கூடி ஓசைமிக்க தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மையதாயிராநின்றது; காடோவெனில் மலர்ந்த பூ விளங்கிய சோலையினிடங்கள் தோறும் தாம்தாம் விரும்பி யொழுகும் பெண் வண்டுடனே ஆண்வண்டுகள் ஒலி செய்யாநின்றன; இன்னதொரு பொழுதிலே யானொருத்தியே அணிந்த கலன்களை நெகிழ விடுத்த தனிமையுடனே கொண்ட வருத்தத்தொடு மிக்க நீடிய கங்குல் முழுவதும் கண்கள் துயின்றிலேன்; ஆதலின் இங்ஙனம் எல்லார் செயலுக்கும் மாறுபாடாக யானிருத்தலால்; இவ்வுலகம் என்னொடு போர் செய்து என்னை ஒழியப் பண்ணுமோ?; அன்றி யாதொரு பயனுமில்லாத எனது நெஞ்சம்; தன் செயலுக்கு மாறுபாடாயிராநின்றது இவ்வுலகம் என்று உலகத்தோடு போர் செய்ய எழுமோ? ஒன்றுந் தோன்ற வில்லையே?

வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. - வெள்ளி வீதியார்

நற்றிணை - 349. நெய்தல்

கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப்  5
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல,
பின்னிலை முனியா நம்வயின்,
என் என நினையும்கொல், பரதவர் மகளே?  10

விரைந்த செலவினையுடைய தேரிலேறிச் சென்றும் பின்பு காலால் நடந்து சென்றும் இவளுக்கு ஏவல் செய்து ஒழுகுபவனாகி; வளைந்த கழியருகினுள்ள அடும்பின் மலரைப் பறித்தும்; தாழம் பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும்; தழையுடை புனையவேண்டி நெய்தலந்தளிரையும், சூட அதன் மலரையுங் கொய்து கொடுத்தும்; நாம் காதலியை முயங்கினாம் போலக் கருதிய உள்ளத்துடனே நாள்தோறும் இத்தன்மையேமாய் இராநிற்கவும்; புனைந்த மாலையணிந்த பசிய பூணையுடைய அரசர்கள் போரிலே மடிந்த பாசறையின் கண்ணே; விளங்குகின்ற படைக்கடலிலே களிற்று யானை படுமாறு போர் செய்தலானாகிய பெரிய புண்ணுற்றுக் கிடந்தாரை; வேறு காப்போர் இன்மையால் அவருடைய உயிர் போமளவும் ஓரியும் பாறும் நரியும் கடித்து அவர் தசையைக் கொள்ளுமேயென்று இரக்கமுற்றுப் பேய் தானே காத்து நின்றாற்போல; இத்தோழியின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து; நம்காதலியாகிய பரதவர் மகள் எவ்வண்ணம் மாறுபாடாகக் கருதி யிருக்கின்றனளோ?;

தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. - மிளை கிழான் நல்வேட்டனார்

நற்றிணை - 350. மருதம்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
பழனப் பல் புள் இரிய, கழனி
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல் கவின் தொலையினும் தொலைக! சார  5
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை; வாடிய கோதையை;
ஆசு இல் கலம் தழீஇயற்று;
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!  10

வெள்ளிய நெற்கதிரை அறுக்கும் மள்ளர் முழங்குகின்ற தண்ணுமைக்கு அஞ்சி வயலிலுள்ள பலவாகிய புள்ளினமெல்லாம் இரிந்தோடிச் செறிதலால்; வயலின்மீது தாழ்ந்து வளைந்த கிளையையுடைய மருதமரத்தே தூங்குகின்ற பூங்கொத்துகள் உதிராநிற்கும்; இரவலர்க்குத் தேர் கொடுக்கும் வண்மையுடைய (விராஅன்) என்னும் கொடைவள்ளலின் இருப்பையூர் போன்ற; எனது பழைய அழகெல்லாம் கெடுவதாயினுங் கெடுக; என்னருகில் நீ நெருங்குமாறு விடுவேனல்லேன் அங்ஙனம் விடுகிற்பேனாயின்; என்வாயினால் நின்னை விலக்கப்பட்டும் என் அகத்திடுகைகள் நின்னை வல்லே அணைத்து முயங்காநிற்கும்; நீதானும் வலிமையுடைய குவிந்த பரத்தையின் கொங்கையினாலே சாடப்பட்ட சந்தனத்தையுடைய அவள் குழைய முயங்கலாலே துவண்டு வாடிய மாலையையுடையை; ஆதலால் நின்னைத் தீண்டுதல் கலங்கழித் தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்; அதனால் என் மனையின்கண்ணே வாராதே கொள்; நின்னை அணைத்து முயங்கி அப் பரத்தை நின்னொடு நெடுங்காலம் வாழ்வாளாக!

தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது. - பரணர்

 
மேலும் நற்றிணை »
temple news
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை. நல் என்னும் அடைமொழியும் அகப்பொருள் ... மேலும்
 

நற்றிணை (பகுதி-1) மார்ச் 21,2013

நற்றிணை - 1. குறிஞ்சி நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரேதாமரைத் தண் தாது ... மேலும்
 

நற்றிணை (பகுதி-2) மார்ச் 21,2013

நற்றிணை - 51. குறிஞ்சி யாங்குச் செய்வாம்கொல்- தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு ... மேலும்
 

நற்றிணை (பகுதி-3) மார்ச் 21,2013

நற்றிணை - 101. நெய்தல் முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை ... மேலும்
 

நற்றிணை (பகுதி-4) மார்ச் 21,2013

நற்றிணை - 151. குறிஞ்சி நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,கொல் முரண் இரும் புலி அரும் புழைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar