பதிவு செய்த நாள்
28
மார்
2013
11:03
சென்னை: சென்னையில், நேற்று பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திரம்கோலாகலமாக நடந்தது.வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று காலை முதல் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வேளச்சேரி தண்டீசுவரர் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சிகள், கோலாகலமாக நடந்தன.எட்டாம் படை வீடு திருவல்லிக்கேணி திருமுருகன் கோவிலில்,28வது ஆண்டு பங்குனிஉத்திர பெருவிழா,வெகு விமரிசையாககொண்டாடப்பட்டுவருகிறது.மூன்று நாள் நடக்கும் திருவிழாவில், நேற்று, பால் குடம் எடுத்தல், அலகு குத்துதல், தேர் இழுத்தல் போன்றநிகழ்ச்சிகள் நடந்தன.முன்னதாக, முதல் நாள் நிகழ்ச்சியான, நேற்று முன்தினம் இரவு, முருகன், மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் அருள் பாலித்தார்.நேற்று காலை, 8:30 மணிக்கு கோவிலில் இருந்து, பங்குனி உத்திர பெருவிழா பால்குட திருவீதியுலா துவங்கியது. காலை, 11:00 மணிக்கு கோவிலை வந்தடைந்ததும், சவாமிக்கு பால்குட பூஜை செய்யப்பட்டது. இதில், 1,000 பெண்கள், மஞ்சள் புடவை அணிந்து, பால் குடம் எடுத்தனர். அலகு குத்தி, 350 பேரும், 100 பேர் காவடி எடுத்தும், ஒருவர் தேர் இழுத்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்தனர்.விழாவின் இறுதி நாளான இன்று காலை,சவாமிக்கு சிறப்பு மூலிகை அபிஷேகமும், மாலை, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறும்.