பதிவு செய்த நாள்
29
மார்
2013
10:03
சேலம்: சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் செரிரோட்டில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா, மார்ச், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 26ம் தேதி சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் இருந்து எல்லைப்பிடாரியம்மன் பரிவாரங்களுடன், கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 6 மணியில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 8 மணி முதல் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பகல் 12 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி சென்றனர். நேற்று காலை, 8.30 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. காலை, 10 மணிக்கு அக்னி குண்டம் பொருத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மணக்காடு, ஜான்சன்பேட்டை, அய்யந்திருமாளிகை, சின்னதிருப்பதி, கன்னங்குறிச்சி, சின்னப்புதூர், பெரியபுதூர், அழகாபுரம், பொன்னம்மாப்பேட்டை, செரிரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், வேண்டுதல் காரணமாக, அக்னி குண்டத்துக்கு, விறகுகளை போட்ட வண்ணம் இருந்தனர். மாலை, 4.30 மணிக்கு அம்மன் சின்னதிருப்பதிக்கு சென்று, அங்கு மஞ்சள் நீராடி, மஞ்சள் ஆடை உடுத்தி, சிறப்பு வழிபாடுகளுக்கு பின் சின்னதிருப்பதி, காந்திரோடு, வின்சென்ட் வழியாக ஸ்வாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. வழிநெடுகளிலும் நின்றிருந்த பொதுமக்கள், அக்னி குண்டத்தில் இறங்க சென்ற பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். மாலை, 6 மணிக்கு, ஸ்வாமியை சுமந்தப்படி கோவில் பூசாரிகள், அக்னி குண்டத்தில் இறங்கினர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி குண்டத்தில், இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், பலர் குழந்தைகளை தோளில் சுமந்தப்படி, பூ மிதித்தனர். இன்று (மார்ச் 29) காலை, 8 மணிக்கு பால்குட ஊர்வலம் நடக்கிறது. மதியம், 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4 மணிக்கு செரிரோடு, வின்சென்ட் ஆகிய பகுதிகளில், கோலப்போட்டி நடக்கிறது.