கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோவில் வேங்கடாசலபதிசுவாமிகோவில் உள்ளது. திருப்பதி பிரார்த்தனைகளை ஏற்கும் சிறப்புப்பெற்ற தலம். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் நேற்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் பங்குனி பெருந்திருவிழா தொடங்கியது. முன்னதாக உற்சவர் பொன்னப்பன் பூமிதேவி சிறப்பு புஷ்பலங்காரத்தில் தங்கக்கொடி மரம் முன்பாக எழுந்தருளினர். பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மகாதீபராதனை நடந்தது. அதன்பின் கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு இந்திரவிமானத்தில் தாயாருடன் பெருமாள் வீதியுலா நடந்தது. விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், மாலை சூரியபிரபை, ஆதிசேஷன், கருடன், அனுமந்த, யானை என பல்வேறு வாகனகளில் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 5ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பெருமாள்தாயார் தேசிகனோடு தேரில் எழுந்தருளுகின்றனர். பின் காலை 8 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து தொடங்கி வைக்கின்றனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.